தேடுதல்

நம்பிக்கையை விதைக்கவும் அன்பைக் கட்டியெழுப்பவும்...

பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறும், நல்லாயன் ஞாயிறுமாகிய இன்று கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்படும் இறையழைத்தல்களுக்காகச் செபிக்கும் உலக நாளில், அருள்பணித்துவ மற்றும், துறவற வாழ்வைத் தேர்ந்துகொண்டவர்கள், தங்களின் இறையழைப்புக்காக ஆண்டவனுக்கு நன்றி சொல்கின்றனர், அவ்வாழ்வைக் கொண்டாடுகின்றனர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

நம்பிக்கையை விதைக்கவும் அன்பைக் கட்டியெழுப்பவும் அழைக்கப்படுகின்றீர்கள் என்ற தலைப்பில் இன்றைய நாளில் சிறப்பிக்கப்படும் இறையழைத்தலுக்கான உலக நாளானது, நற்செய்திப் பணிக்கான அழைப்பாகவும், பலவிதமான குறிக்கோள்களால் வகைப்படுத்தப்படும் ஒரே திருஅவையை மீண்டும் கண்டறிவதற்கான ஓர் அரிய வாய்ப்பாகவும் உள்ளது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 21 பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறும், நல்லாயன் ஞாயிறுமாகிய இன்று கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்படும் இறையழைத்தலுக்காக செபிக்கும் உலக நாளை நினைவுகூர்ந்து, மூவேளை செப உரையைத் தொடர்ந்த விண்ணப்பத்தின் போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 20 சனிக்கிழமை மாலை உரோம் மறைமாவட்டத்திற்கான குருக்களாக வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் அருள்பொழிவுபெற்ற புதிய குருக்களை நினைவுகூர்ந்து அவர்களை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், அப்புதிய குருக்களுக்காக செபிப்போம் என்றும் திருப்பயணிகளிடம் கேட்டுக்கொண்டார்.

மத்திய கிழக்குப் பகுதிகளில் நிகழ்ந்துகொண்டிருக்கும் போர்ச்சூழலை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், அமைதிக்கான தனது விண்ணப்பத்தை மீண்டும் வலியுறுத்தி உரையாடலும், பேச்சுவார்த்தைக்கான பாதைகளும் விரிவடையட்டும் என்றும் கூறினார்.

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரயேல், நாட்டில் அமைதி நிலவ தான் தொடர்ந்து செபிப்பதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், துன்புறும் உக்ரைன் மக்களுக்காக செபிக்க மறக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.   

சோர்வடையாத மறைப்பணியாளர் என்று அழைக்கப்பட்ட அருள்பணியாளர் Matteo Pettinari விபத்தில் இறந்தது குறித்து தான் மிகவும் வருந்துவதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அவரது ஆன்மா இறைவனில் நிறையமைதி அடைய செபிப்போம் என்றும் கூறினார். 

உரோம், இத்தாலி மற்றும் உலகின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், அப்போஸ்தலின் சபை அருள்சகோதரிகள், Viterbo, Brescia, Alba Adriatica மற்றும் Arezzo பகுதி திருப்பயணிகள், அனைவரையும் வாழ்த்தி தனது செப விண்ணப்பங்களை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 April 2024, 13:14

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >