தேடுதல்

வாழ்வின் நிறைவை நமக்குத் தருபவர் இயேசுவே

இந்த பாஸ்கா கால இரண்டாம் ஞாயிறானது திருத்தந்தை தூய இரண்டாம் ஜான் பால் அவர்களால் இறை இரக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டது

மெரினா ராஜ் - வத்திக்கான்

வாழ்வின் நிறைவை நமக்குத் தருபவர் இயேசுவே என்பதை உணர நாம் அழைக்கப்படுகின்றோம் என்றும், நம்மைத் தேடும் இயேசுவை நாமும் தேட வேண்டும், அவரைச் சந்திக்க நம்மை அனுமதிக்கவேண்டும், நமது இதயங்களை அவருக்காகத் திறக்கவேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 7 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய பாஸ்கா கால மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறன்று கொண்டாடப்படும் இறை இரக்க ஞாயிறு பற்றியும் எடுத்துரைத்தார்.

திருத்தந்தை தூய இரண்டாம் ஜான் பால் அவர்களால் இறை இரக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த பாஸ்கா கால இரண்டாம் ஞாயிறானது இயேசுவே இறைமகனாகிய மெசியா என நாம் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே கொண்டாடப்படுகின்றது என்று கூறினார் திருத்தந்தை.

வாழ்வைப் பெறுதல்

வாழ்வைப்பெறுதல் என்றால் என்ன? என்ற கேள்வியுடன் தனது மூவேளை செப உரையைத் தொடங்கிய திருத்தந்தை அவர்கள், உண்ணுதல், குடித்தல், பொழுதுபோக்குதல், பணம் மற்றும் பொருள்களைக் குவித்தல், புதிய மற்றும் உறுதியான உணர்வுகளைக் கொண்டிருத்தல் போன்ற பல வழிகளில் பலர் வாழ்க்கையை வாழ்கின்றனர் என்றும் எடுத்துரைத்தார்.

முதலில் இனிமையாகத் தோன்றும் இந்த பாதைகள் இதயத்திற்கு மகிழ்வைத் தராது என்றும், இப்பாதையில் தொடர்ந்து பயணிக்கும்போது அன்பு, துன்பம், மரணம் போன்றவற்றின் தவிர்க்க முடியாத அனுபவங்கள் பதிலளிக்கப்படாத்தாகவும் அனைவரையும் ஒன்றிணைக்கும் நமது கனவுகள் நிறைவேறப்படாததாகவும் இருக்கும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

என்றென்றும் நம்பிக்கையில் வாழ்வது என்பது, முடிவில்லாத வகையில் அன்பு செய்யப்படுவது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இன்றைய நற்செய்தியின் வழியாக நிறைவான வாழ்க்கையைத் தரும் இயேசுவை உணர நாம் அழைக்கப்படுகின்றோம் என்றும், அவரே வாழ்வின் நிறைவு என்றும் கூறினார்.

உயிர்த்த இயேசுவைக் கண்ட சீடர்களின் வாழ்வு

இயேசு இறந்த பின் வீடுகளில் பயந்து முடங்கிக் கிடந்த சீடர்களைக் காண வந்த இயேசு வலி மற்றும் துன்பத்தின் அடையாளமாக இருந்த தனது காயங்களைக் காட்டுகின்றார் அவைகள் மன்னிப்பு மற்றும் இரக்கத்தின் வழிகளாக மாறின என்று கூறிய திருத்தந்தை அவர்கள், தோல்வியைத் தரும் மரணம் மற்றும் பாவத்தை வென்று, வாழ்வைக் கொண்டு வந்தவர் இயேசு என்றும், இதனை சீடர்கள் அவரது காயங்களைத் தங்களது கைகளால் தொட்டு உணர்ந்து கொண்டனர் என்றும் கூறினார்.     

உயிர்த்த இயேசுவைக் கண்ட சீடர்கள், தூய ஆவியாரைப் பெற்றுக்கொள்கின்றனர், மகிழ்ச்சி, அன்பு மற்றும் நம்பிக்கையால் நிரப்பப்பட்டவர்களாய் மாறுகின்றனர் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், நம்பிக்கை நம்மிடம் உள்ளதா? நமது நம்பிக்கை எப்படி இருக்கின்றது என்பதைப் பற்றி சிந்திப்போம் என்றும் கூறினார்.

சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த இயேசுவின் மீது நமது பார்வையை நிலைநிறுத்த வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள்,  அருளடையாளங்கள் மற்றும் செபங்களின் வழியாக அவரைச் சந்திக்கவும், அவரை அடையாளம் காணவும், நம்பிக்கை கொள்ளவும், அவருடைய அருளால் நாம் தொடப்பட்டு வழிநடத்தப்படவும் செபிப்போம் என்றும் கூறினார்.

இயேசுவைப்போல அன்பையும் மகிழ்வையும் வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், இயேசுவுடனான சந்திப்பு உயிருள்ள சந்திப்பாக இருக்கவும், புதிய வாழ்க்கையைப் பெறவும் நமது இதயங்களை அவருக்குத் திறப்போம் என்றும் கூறினார்.

இயேசுவின் உயிர்த்தெழுதலின் வல்லமையை நான் நம்புகிறேனா? இயேசு உயிர்த்தெழுந்தார் என்று நான் நம்புகிறேனா? பாவம், அச்சம் மற்றும் மரணத்தின் மீதான அவரது வெற்றியை நான் நம்புகிறேனா? ஆண்டவரோடு, இயேசுவோடு இணைந்திருக்க நான் என்னை அனுமதிக்கிறேனா? என் சகோதர சகோதரிகளை அன்பு செய்யவும் நம்பிக்கை கொள்ளவும் இயேசுவால் உந்தித்தள்ளப்பட அனுமதிக்கிறேனா? என்று சிந்தித்துப் பார்க்க அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வாறு தனது மூவேளை செப உரையினை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 April 2024, 12:36

அல்லேலூயா வாழ்த்தொலி என்றால் என்ன?

அல்லேலூயா வாழ்த்தொலி செபம் (அல்லது அல்லேலூயா வாழ்த்தொலி) நான்கு மரியா செபங்களில்  ஒன்றாகும் (மற்றவை l’Alma Redemptoris Mater,  l’Ave Regina Coelorum e il Salve Regina மீட்பரின் அற்புத அன்னை , வானக அரசியே வாழ்க மற்றும் வாழ்க அரசியே).

இது 1742ம் ஆண்டில், திருத்தந்தை 14ம் பெனடிக்ட் அவர்கள், இயேசுவின் உயிர்ப்பு காலத்தில் , அதாவது உயிர்ப்பு ஞாயிறு முதல் தூய ஆவியார் பெருவிழா  நாள் வரை, மரணத்தின் வெற்றிக்கு அடையாளமாக மூவேளை செபத்திற்குப் பதிலாக, உயிர்ப்பு செபம் செபிக்கப்பட வேண்டுமென அறிவித்தார்..

அச்செபத்தை, மூவேளை செபத்தைப்போல, ஒரு நாளைக்கு மூன்று முறை அதாவது காலையிலும், நண்பகலிலும், மாலையிலும் , கடவுளுக்கும் மரியாவுக்கும் ஒவ்வொரு நாளும் செபிக்க வேண்டும் : .

ஒரு பக்தியுள்ள மரபுப்படி, இந்தச் செபம், ஆறு அல்லது பத்தாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாகும். அதேநேரத்தில், அச்செபம் பரவத்தொடங்கியது பற்றி 13ம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அது பிரான்சிஸ்கன் கட்டளை செபத்தில் சேர்க்கப்பட்டபோது. இது நான்கு சுருக்கமான வசனங்களை உள்ளடக்கியது, இவை ஒவ்வொன்றும் அல்லேலூயாவுடன் முடிவடைகின்றன. விண்ணக அரசியான மரியாவுக்கு  கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் உள்ள  மகிழ்ச்சியுடன் செபிக்கப்படுகிறது.

ஏப்ரல் 6, 2015, உயிர்ப்பு பெருவிழாவுக்கு அடுத்த நாளன்று , இயேசுவின் உயிர்ப்பு காலத்தில்  திருத்தந்தை  பிரான்சிஸ்  அவர்கள், இந்த செபத்தைப் பற்றி கூறும்போது போது, இதயத்தின் மனநிலை என்னவாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்

 "... மரியா  அகமகிழுமாறு நாம் அவரை அழைக்கிறோம், ஏனெனில், மரியா தன் வயிற்றில் தாங்கியவர், அவர் வாக்குறுதி அளித்தது போலவே உயிர்த்துவிட்டார்; நாம் மரியின் பரிந்துரையில் நம்பிக்கை வைப்போம். உண்மையில், நம்முடைய மகிழ்ச்சி மரியின்  மகிழ்ச்சியின் ஒரு பிரதிபலிப்பாகும், ஏனென்றால் மரியாவே இயேசுவின் நிகழ்வுகளைக் காக்கிறவர், விசுவாசத்தோடு பாதுகாக்கிறவர்.. எனவே, தாய் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதால்,  மகிழ்ச்சியாக இருக்கும் பிள்ளைகள் என்ற உணர்வில்,  இந்த செபத்தை நாம் செபிப்போம்.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >