தேடுதல்

தன் வாழ்வையே தியாகம் செய்த நல்லாயன் இயேசு

ஆயனாகிய இயேசு நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட விதத்தில் அறிந்து வைத்திருக்கின்றார், நம் பெயர் சொல்லி அழைக்கின்றார், நாம் தொலைந்து போகையில் நம்மை தேடுகின்றார்

மெரினா ராஜ் - வத்திக்கான்

இயேசு தனது மந்தைக்காகத் தன் வாழ்வைப் பகிர்ந்து கொண்ட சிறந்த ஆயன் மட்டுமல்ல, அவர் நமக்காகத் தன் வாழ்க்கையையே தியாகம் செய்தவரும், தனது ஆற்றலை நமக்குத் தந்தவருமான ஒரு நல்ல ஆயன் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 21 ஞாயிற்றுக்கிழமை பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறை நல்லாயன் ஞாயிறாக திருஅவை சிறப்பிக்கும் வேளையில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார் என்ற நற்செய்தி வரிகளை மேற்கோள்காட்டி தனது கருத்துக்களை எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், ஆயனாக இருப்பது என்பது இயேசுவின் காலத்தில் ஒரு தொழில் மட்டுமல்ல மாறாக, பகல் - இரவு என மந்தைகளுக்காகத் தனது முழு வாழ்க்கையையும் கையளிப்பது என்று எடுத்துரைத்தார்.

ஆயனாகிய இயேசு நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட விதத்தில் அறிந்து வைத்திருக்கின்றார், நம் பெயர் சொல்லி அழைக்கின்றார், நாம் தொலைந்து போகையில் நம்மை தேடுகின்றார் என்றும், ஆயன் என்பவன் மந்தையை வழிநடத்துபவன் மட்டுமல்ல எல்லாவற்றிற்கும் மேலாக நம் ஒவ்வொருவரையும் நினைத்து தன் வாழ்வின் அன்பாகக் கருதுபவர் என்றும் கூறினார் திருத்தந்தை.

இயேசு நமக்காகத் தன் உயிரைத் தந்தார், இறந்து உயிர்த்தார், நாம் காணாத அழகை நம் ஒவ்வொருவரிடத்தில் கண்டு நம்மை அன்பு செய்கின்றார் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், எத்தனை பேர் இன்று தன்னைத் தகுதியற்றவர்களாகவும், தவறானவர்களாகவும் கருதிக்கொள்கின்றார்கள் என்று சிந்தித்துப் பார்க்க அழைப்புவிடுத்தார்.

நாம் அடையக்கூடிய இலக்குகள், உலகத்தின் பார்வையில் நமது வெற்றி, மற்றவர்களின் தீர்ப்பு ஆகியவற்றைப் பொறுத்தே நமது மதிப்பு அமையும் என்று எத்தனை முறை நாம் நினைக்கிறோம்? அற்ப விடயங்களுக்காக அடிக்கடி நம்மைத் தூக்கி எறிந்து விடுகிறோமா? என்று சிந்தித்துப் பார்ப்போம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இன்று நாம் அனைவரும் அவரின் பார்வையில் மதிப்புமிக்கவர்கள் என்று இயேசு கூறுகின்றார் என்றும்  எடுத்துரைத்தார்.

இயேசுவின் பிரசன்னத்தின் முன் நம்மை நிலை நிறுத்தவும், அன்பு நிறைந்த நல்ல ஆயனாம் அவரது கரங்கள் நம்மை வரவேற்கவும் உயர்த்தவும் அனுமதிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு நாளும் நமது வாழ்க்கையின் மதிப்பை உணர்ந்து அதனை அரவணைத்துக் கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

திருநற்கருணை ஆராதனை, செபம், போன்றவற்றிற்கு நேரம் ஒதுக்கி கிறிஸ்துவின் பிரசன்னத்தில் நம்மை அர்ப்பணிக்கின்றோமா? என்று நம்மை நாமே கேள்விக்குட்படுத்திக்கொள்ள அழைப்புவிடுத்த திருத்தந்தை அவர்கள், வாழ்வின் இரகசியங்களைக் கண்டறிவதன் வழியாக இயேசு நமக்காக, நம் ஒவ்வொருவருக்காகத் தன் வாழ்க்கையை அளித்தார் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும் என்றும் கூறினார்.

மேலும் இயேசுவிற்கு நாம் ஒவ்வொருவரும் மிக முக்கியமானவர்கள் என்றும், வாழ்வின் சாராம்சத்தை இயேசுவில் காண அன்னை மரியா நமக்கு உதவுவாராக என்றும் கூறி மூவேளை செப உரைக்குப் பின் கூடியிருந்த திருப்பயணிகளுக்குத் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 April 2024, 13:13

அல்லேலூயா வாழ்த்தொலி என்றால் என்ன?

அல்லேலூயா வாழ்த்தொலி செபம் (அல்லது அல்லேலூயா வாழ்த்தொலி) நான்கு மரியா செபங்களில்  ஒன்றாகும் (மற்றவை l’Alma Redemptoris Mater,  l’Ave Regina Coelorum e il Salve Regina மீட்பரின் அற்புத அன்னை , வானக அரசியே வாழ்க மற்றும் வாழ்க அரசியே).

இது 1742ம் ஆண்டில், திருத்தந்தை 14ம் பெனடிக்ட் அவர்கள், இயேசுவின் உயிர்ப்பு காலத்தில் , அதாவது உயிர்ப்பு ஞாயிறு முதல் தூய ஆவியார் பெருவிழா  நாள் வரை, மரணத்தின் வெற்றிக்கு அடையாளமாக மூவேளை செபத்திற்குப் பதிலாக, உயிர்ப்பு செபம் செபிக்கப்பட வேண்டுமென அறிவித்தார்..

அச்செபத்தை, மூவேளை செபத்தைப்போல, ஒரு நாளைக்கு மூன்று முறை அதாவது காலையிலும், நண்பகலிலும், மாலையிலும் , கடவுளுக்கும் மரியாவுக்கும் ஒவ்வொரு நாளும் செபிக்க வேண்டும் : .

ஒரு பக்தியுள்ள மரபுப்படி, இந்தச் செபம், ஆறு அல்லது பத்தாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாகும். அதேநேரத்தில், அச்செபம் பரவத்தொடங்கியது பற்றி 13ம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அது பிரான்சிஸ்கன் கட்டளை செபத்தில் சேர்க்கப்பட்டபோது. இது நான்கு சுருக்கமான வசனங்களை உள்ளடக்கியது, இவை ஒவ்வொன்றும் அல்லேலூயாவுடன் முடிவடைகின்றன. விண்ணக அரசியான மரியாவுக்கு  கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் உள்ள  மகிழ்ச்சியுடன் செபிக்கப்படுகிறது.

ஏப்ரல் 6, 2015, உயிர்ப்பு பெருவிழாவுக்கு அடுத்த நாளன்று , இயேசுவின் உயிர்ப்பு காலத்தில்  திருத்தந்தை  பிரான்சிஸ்  அவர்கள், இந்த செபத்தைப் பற்றி கூறும்போது போது, இதயத்தின் மனநிலை என்னவாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்

 "... மரியா  அகமகிழுமாறு நாம் அவரை அழைக்கிறோம், ஏனெனில், மரியா தன் வயிற்றில் தாங்கியவர், அவர் வாக்குறுதி அளித்தது போலவே உயிர்த்துவிட்டார்; நாம் மரியின் பரிந்துரையில் நம்பிக்கை வைப்போம். உண்மையில், நம்முடைய மகிழ்ச்சி மரியின்  மகிழ்ச்சியின் ஒரு பிரதிபலிப்பாகும், ஏனென்றால் மரியாவே இயேசுவின் நிகழ்வுகளைக் காக்கிறவர், விசுவாசத்தோடு பாதுகாக்கிறவர்.. எனவே, தாய் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதால்,  மகிழ்ச்சியாக இருக்கும் பிள்ளைகள் என்ற உணர்வில்,  இந்த செபத்தை நாம் செபிப்போம்.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >