தேடுதல்

இயேசுவுடன் சிறிது நேரத்தைச் செலவிட கற்றுக்கொள்வோம்

நம் வாழ்வு நிகழ்வுகளை மீண்டும் நம் நினைவுக்குக் கொணர்ந்து, துன்ப துயர வேளைகளை இயேசுவுடன் பகிரும்போது அவரும் நம்முடன் உடனிருப்பார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அனைத்துப் பொருட்களின் வித்தியாசமானக் கோணங்களை நமக்குக் கற்றுத்தரும் இயேசுவுடன் ஒவ்வொரு நாளும், இரவு படுக்கைக்கு முன்னர் சிறிது நேரத்தைச் செலவிட கற்றுக்கொள்வோம் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 23, ஞாயிற்றுக்கிழமையன்று வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எம்மாவுஸ் செல்லும் வழியில் இரு சீடர்கள், உயிர்த்த இயேசுவைச் சந்தித்த நிகழ்வு குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

யெருசலேமில் இருந்து சென்ற சீடர்கள் தங்களுடன் நடந்த இயேசுவை அடையாளம் கண்டுகொள்ளாத நிலையில், இறைவார்த்தையின் ஒளியில் அனைத்து நிகழ்வுகளுக்கும் புது கண்ணோட்டத்தை வழங்கி அவர்களை ஆறுதல்படுத்திய இயேசுவின் செயலைக் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த சீடர்களைப் போல் நாமும் நம் வாழ்வு நிகழ்வுகளை மீண்டும் நம் நினைவுக்குக் கொணர்ந்து, துன்ப துயர வேளைகளை இயேசுவுடன் பகிரும்போது அவரும் நம்முடன் உடனிருப்பார் என திருப்பயணிகளிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வொரு நாள் மாலையிலும் நாம் நம் தினசரி நிகழ்வுகளின் நினைவுகளை இயேசுவுடன் பகிரும்போது அவைகளை வேறு கண்ணோட்டத்தில் பார்க்க நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்வோம் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

இயேசு வழங்கும் உண்மையால் நம்மைக் காயப்படுத்த நம்மை நாம் அனுமதிப்போம் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு நாள் நிகழ்வுகளையும் இரவு படுக்கைக்கு முன்னர் நம் மனக்கண்முன் கொணர்ந்து, நம் செயல்பாடுகளில் அன்பு இருந்ததா என்ற கேள்வியைக் கேட்டு, நம் வீழ்ச்சிகள், துயர்கள், சந்தேகங்கள், அச்சங்கள் ஆகியவைகளை இயேசுவின் முன்வைக்கும்போது, நம்மை ஊக்கப்படுத்தும் புதிய வழிகளை அவர் நமக்குத் திறக்கக் காண்போம் என தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையை நிறைவுச் செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 April 2023, 13:58

அல்லேலூயா வாழ்த்தொலி என்றால் என்ன?

அல்லேலூயா வாழ்த்தொலி செபம் (அல்லது அல்லேலூயா வாழ்த்தொலி) நான்கு மரியா செபங்களில்  ஒன்றாகும் (மற்றவை l’Alma Redemptoris Mater,  l’Ave Regina Coelorum e il Salve Regina மீட்பரின் அற்புத அன்னை , வானக அரசியே வாழ்க மற்றும் வாழ்க அரசியே).

இது 1742ம் ஆண்டில், திருத்தந்தை 14ம் பெனடிக்ட் அவர்கள், இயேசுவின் உயிர்ப்பு காலத்தில் , அதாவது உயிர்ப்பு ஞாயிறு முதல் தூய ஆவியார் பெருவிழா  நாள் வரை, மரணத்தின் வெற்றிக்கு அடையாளமாக மூவேளை செபத்திற்குப் பதிலாக, உயிர்ப்பு செபம் செபிக்கப்பட வேண்டுமென அறிவித்தார்..

அச்செபத்தை, மூவேளை செபத்தைப்போல, ஒரு நாளைக்கு மூன்று முறை அதாவது காலையிலும், நண்பகலிலும், மாலையிலும் , கடவுளுக்கும் மரியாவுக்கும் ஒவ்வொரு நாளும் செபிக்க வேண்டும் : .

ஒரு பக்தியுள்ள மரபுப்படி, இந்தச் செபம், ஆறு அல்லது பத்தாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாகும். அதேநேரத்தில், அச்செபம் பரவத்தொடங்கியது பற்றி 13ம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அது பிரான்சிஸ்கன் கட்டளை செபத்தில் சேர்க்கப்பட்டபோது. இது நான்கு சுருக்கமான வசனங்களை உள்ளடக்கியது, இவை ஒவ்வொன்றும் அல்லேலூயாவுடன் முடிவடைகின்றன. விண்ணக அரசியான மரியாவுக்கு  கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் உள்ள  மகிழ்ச்சியுடன் செபிக்கப்படுகிறது.

ஏப்ரல் 6, 2015, உயிர்ப்பு பெருவிழாவுக்கு அடுத்த நாளன்று , இயேசுவின் உயிர்ப்பு காலத்தில்  திருத்தந்தை  பிரான்சிஸ்  அவர்கள், இந்த செபத்தைப் பற்றி கூறும்போது போது, இதயத்தின் மனநிலை என்னவாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்

 "... மரியா  அகமகிழுமாறு நாம் அவரை அழைக்கிறோம், ஏனெனில், மரியா தன் வயிற்றில் தாங்கியவர், அவர் வாக்குறுதி அளித்தது போலவே உயிர்த்துவிட்டார்; நாம் மரியின் பரிந்துரையில் நம்பிக்கை வைப்போம். உண்மையில், நம்முடைய மகிழ்ச்சி மரியின்  மகிழ்ச்சியின் ஒரு பிரதிபலிப்பாகும், ஏனென்றால் மரியாவே இயேசுவின் நிகழ்வுகளைக் காக்கிறவர், விசுவாசத்தோடு பாதுகாக்கிறவர்.. எனவே, தாய் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதால்,  மகிழ்ச்சியாக இருக்கும் பிள்ளைகள் என்ற உணர்வில்,  இந்த செபத்தை நாம் செபிப்போம்.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >