தேடுதல்

மாசுபடுத்தப்பட்ட இந்தோனேசியா கடல் மாசுபடுத்தப்பட்ட இந்தோனேசியா கடல்  (ANSA)

பருவநிலை மாற்றத்தை சமாளிக்க தீவுக்கூட்டம் ஒன்று சேர்ந்துள்ளது

உலகெங்கிலும் உள்ள 51 நாடுகளை ஒன்றிணைக்கும் தீவுக்கூட்டம் மற்றும் தீவு மாநிலங்களின் மன்றம் (AIS), மனாடோ பிரகடனத்தின் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பலப்படுத்தப்படுகிறது

திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்

கடல் மட்ட உயர்வு, பருவநிலை மாற்றத்தின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான உறுதிப்பாட்டை உள்ளடக்கிய  பிரகடனத்தில், அக்டோபர் 10 புதன்கிழமை இந்தோனேசியாவின் பாலி தீவின் நுசா துவாவில் உள்ள தீவுக்கூட்டம் மற்றும் தீவு மாநிலங்களின் மன்றத்தின் (ஏஐஎஸ்) 32 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்ட நாடாக இருக்கும் இந்தோனேசியா, ஐந்து முக்கிய தீவுகள் மற்றும் ஏறக்குறைய 30 சிறிய தீவுக்கூட்டங்களைக்கொண்டு ஏறக்குறைய 18,110 தீவுகளை தன்னுள் கொண்டுள்ளது.

காலநிலை மாற்றத்தை எதிர்க்கும் தன்மை, கடல் மாசுபாடு, அவசரகால மேலாண்மை மற்றும் மேம்படுத்தப்பட்ட நிலையான மீன்பிடி மற்றும்,  நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு கடல் வளங்களைப் பயன்படுத்துவதற்கான சவால்களை கூட்டாக எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ள AIS மன்றம், ஜப்பான் மற்றும் இங்கிலாந்து உட்பட 51 தீவு மற்றும் தீவு நாடுகளைக் உள்ளடக்கிய ஒரு தளமாகும்.

AIS மன்றக் கூட்டங்களின் முதல் அமர்வின் போது,  தீவு மற்றும் தீவுக்கூட்ட நாடுகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் உண்மையானவை, அனைவருக்கும் பொதுவானவை என்றும், AIS மன்றத்தின் மூலம், பல கிலோமீட்டர் கடற்கரைகள் மற்றும் கடல்களைக் கொண்ட அனைத்து நாடுகளையும் ஒத்துழைப்புக்கு அழைக்கிறது என்றும் இந்தோனேசிய அரசுத்தலைவர் ஜோகோ விடோடோ கூறியுனார்.

பொதுவான புவியியல் குணாதிசயங்களைக் கொண்ட மாநிலங்களுக்கு இடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதோடு, கடினமான சவால்களுக்கு மத்தியிலும் பொருளாதார வளர்ச்சி தொடர்வதை AIS உறுப்பு நாடுகள் உறுதி செய்ய விரும்புகின்றன என்றும், தீவு மற்றும் கடலோர நாடுகள், இருப்பிடம், அளவு மற்றும் வளர்ச்சியின் அளவைப் பொருட்படுத்தாமல், ஒரே சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு சவால்களை எதிர்கொள்கின்றன என்றும், வெவ்வேறு நிலைகளில் அவை, கூட்டு முயற்சிகள் மற்றும் உண்மையான ஒத்துழைப்பு மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும் இவ்வுலகளாவிய அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போகோர் விவசாய நிறுவனத்தின் அதிபர் ஆரிப் சத்ரியா, நீடித்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வளர்ச்சியின் கொள்கைகளுடன் இணைந்து கடல்களின் பொருளாதார திறன் குறித்து விளக்கியதோடு, சிறிய மிதக்கும் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளதை பற்றிக் கூறினார்.

கடல் உயிரினங்களை ஈர்ப்பதற்கான சிறந்த மிதக்கும் கட்டமைப்புக்கள், மீன்பிடி கருவியாகப் பயன்படுத்தப்படுவதாகவும், அவை இப்போது மடகாஸ்கரில் உள்ள மீனவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், இது எளிதானது, மலிவானது மற்றும் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்  என்றும் கூறியுள்ளார்

ஒரு நிலையான பொருளாதாரத்தை உருவாக்க, சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாவை ஊக்குவிக்க, சர்வதேச ஒத்துழைப்பை உருவாக்க, நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய இந்தோனேசியாவின் வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சுடி அவர்கள்,  கடல் குப்பைகளை தீவிரமாகக் கையாள வேண்டும், கடலோரப் பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகள் இல்லாமல் சுத்தம் செய்ய வேண்டும், தூய்மையான கடல் மேலாண்மை மற்றும் நல்ல கடல்சார் நிர்வாகத்தைக் கொண்டிருப்பதற்கு உதவியாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் ஒரு நிலையான பொருளாதார அமைப்பை உருவாக்க அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பொருளாதார மாதிரி இந்தோனேசியாவின் ஆதரவுடன் தீவு நாடுகள் மற்றும் தீவுக்கூட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், இந்த நீலப் பொருளாதாரத்தின் சாத்தியக்கூறுகள் மிகப் பெரியது, அது ஆய்வு செய்யப்பட்டு மக்களின் வளர்ச்சி மற்றும் நல்வாழ்வின் தூணாக மாற பயன்படுத்தப்பட வேண்டும், என்றும் விடோடோ கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 October 2023, 16:44