தேடுதல்

மக்கள் தொகை மக்கள் தொகை  

வாரம் ஓர் அலசல் – உலக மக்கள் தொகை நாள்

1987 ஆம் ஆண்டில் ஜூலை 11 ஆம் நாளிலேயே உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியதால் ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் உலகமக்கள் தொகை நாள் கொண்டாடப்படுகின்றது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருவதே உலக மக்கள் தொகை நாளாகும். 1987 ஆம் ஆண்டில் ஜூலை 11 ஆம் நாளிலேயே உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியதால் ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் உலகமக்கள் தொகை நாள் கொண்டாடப்படுகின்றது.

இந்தியா மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி  முதலிடத்தைப் பிடித்துள்ளது. அண்மையில் ஐ.நா. மக்கள்தொகை நிதியத்தின் (யுஎன்எஃப்பிஏ) உலக மக்கள்தொகை 2023 அறிக்கையின்படி உலக மக்கள் தொகையில் இந்தியா 142.86 கோடி மக்கள்தொகையுடன் முதலிடத்திலும், சீனா 142.57 கோடி மக்கள்தொகையுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது.  சீனா கடந்த  200 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் தொகையில் முதலிடத்திலிருந்து வந்த நிலையில் 2023 ஆம் ஆண்டில் இந்தியா மக்கள் தொகையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

மொத்தமுள்ள இந்திய மக்கள் தொகையில் 14 வயது வரை 25 விழுக்காட்டினரும், 15 முதல் 64 வயது வரை 68 விழுக்காட்டினரும், 65 வயதுக்கு  மேற்பட்டவர்கள் 7 விழுக்காட்டினரும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு, உக்ரைன் -ரஷியா இடையேயான போர் போன்றவற்றின் காரணமாக, தமிழ்நாட்டின்  அளவுக்குக் கூட மக்கள்தொகை இல்லாத பல நாடுகள் பொருளாதாரரீதியாக கடும் சவாலை எதிர்கொண்டு திண்டாடிக் கொண்டிருக்கின்றன. உலக அளவில் உத்தரப்பிரதேசத்தின் மக்கள்தொகையையே கொண்ட பாகிஸ்தானும் (சுமார் 23.14 கோடி), தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் க மூன்றில் ஒரு பங்கையே கொண்ட இலங்கையும் (2.2 கோடி) பொருளாதார ரீதியாக மிகப் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன. 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் 4.2 பேர் பிறக்கிறார்கள், 1.8 பேர் இறக்கிறார்கள். 2050 ஆம் ஆண்டில், உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 70% பேர் நகரங்களில் வசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் ஆயுட்காலம் உலகளவில், 2010-2015 இல் 71 ஆண்டுகளில் இருந்து 2045-2050 இல் 77 ஆகவும், இறுதியில் 2095-2100 இல் 83 ஆகவும் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள்தொகை ஆண்டுக்கு 1.10 விழுக்காடு அதிகரிக்கிறது. ஆண்டுக்கு 8,30 இலட்சம் மக்கள் அதிகரித்து வருகின்றனர். உலக மக்கள் தொகை 2030ல் 8.6 பில்லியனாகவும், 2050ல் 9.8 பில்லியனாகவும், 2100ல் 11.2 பில்லியனாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021-ம் ஆண்டு நடைபெற வேண்டிய நிலையில், கரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளன. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 20 கோடியாக இருந்த நாட்டின் மக்கள்தொகை நூறாண்டுகளில் 100 கோடியாகவும், 165 கோடியாக இருந்த உலக மக்கள்தொகை 600 கோடியாகவும் அதிகரித்தது. 2011-ல் உலக மக்கள்தொகை 700 கோடியாக அதிகரித்து, தற்போது 800 கோடியை நெருங்கி வருகிறது.

உலகம் முழுவதும் தற்போதைய காலகட்டத்தில் மிகப்பெரும் பிரச்சினையாக பார்க்கப்படுபவற்றில் ஒன்று மக்கள் தொகை. நாளுக்கு நாள் உலகளாவிய மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இன்று உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படுகிறது. மக்கள் தொகை தொடர்ந்து அதிகரிப்பது ஒரு நாட்டை பொருளாதார ரீதியாகவும், மனிதவள ரீதியாகவும் பெரிதும் பாதிக்கும் காரணிகளாக உள்ளன. நாடு முழுவதும் உள்ள மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய தேவை ஒவ்வொரு நாட்டிற்கும் உள்ளது. இந்நிலையில் இயற்கை வளம், வேளாண் வசதிகள், உள்நாட்டு உற்பத்தி குறைவாக உள்ள நாடுகள் தங்கள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பிற நாடுகளிலிருந்து இறக்குமதி மற்றும் உதவிகளை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

இதுதவிர அதிகரித்து வரும் மக்கள் தொகையால் வாழ்விடங்களுக்காக இயற்கை வனப்பகுதிகள் அழிக்கப்படுதல், நகரமயமாக்கல் உள்ளிட்டவையும் நடந்தேறுகின்றன. உணவு உற்பத்தியையும் மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகரிக்க வேண்டிய தேவை எழுகிறது. மருத்துவ வசதி, சுகாதாரம் போன்றவையும் அனைவருக்கும் கிடைக்க முடியாத நிலை பல நாடுகளில் உள்ளது. இதுபோன்ற பல காரணங்களால் உலகளாவிய அமைப்புகள் பலவும் மக்கள் தொகை கட்டுக்குள் இருப்பதை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகோள்கள் விடுத்து வருகின்றன.

உலகில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள்தொகையை நைஜீரியாவில் காணலாம். தற்போதைய மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தில், 2050 இல் உயிர்வாழ்வதற்கு 3 பூமிகள் தேவைப்படும். நமது மக்கள் தொகை 1970 இல் இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகம்.

உலகின் சில பகுதிகளில் நிமிடத்திற்கு 250 குழந்தைகள் பிறக்கின்றன. 2010 மற்றும் 2015 க்கு இடையில், ஆயுட்காலம் 67 இலிருந்து 71 ஆக உயர்ந்தது மற்றும் மதிப்பீட்டின்படி, இது 2045 மற்றும் 2050 க்கு இடையில் 77 ஆகவும், 2095 மற்றும் 2100 க்கு இடையில் 83 ஆண்டுகளாகவும் உயரும். 2017 ஐ விட 2050 இல் ஐரோப்பாவின் மக்கள் தொகை மட்டுமே குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"மனிதனுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கும் பூமியில் உள்ள சக்தியை விட மக்கள் தொகையின் சக்தி எல்லையற்றது." - தாமஸ் மால்தஸ்

"குடும்பம் சிறியதாக இருக்கும்போது, ​​​​அவர்களிடம் உள்ள சிறியதை அவர்களால் பகிர்ந்து கொள்ள முடியும். அமைதி நிலவுகிறது.” – பிலிப் நுகுனா

"நாங்கள் ஓய்வெடுக்கவும், நிதானமாகவும் இருக்கும் நேரம் போய்விட்டது. நமது வருங்கால சந்ததியினருக்கு உதவ, மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்த, வலுவாக செயல்பட வேண்டிய நேரம் இது நமது நலவாழ்வை மேம்படுத்துவதன் வழியாகவும் பெண்களை மேம்படுத்துவதன் வழியாகவும், மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம். அனைவருக்கும் உலக மக்கள் தொகை நாள் நல்வாழ்த்துக்கள் (இணையதள உதவி)  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 July 2023, 10:40