இனியது இயற்கை : மழை பெற மரம் தேவை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
நம் உயிர் காக்க தண்ணீர் அவசியம்। அந்த தண்ணீர் நம் உயிரை போல அவசியம்.
ஒவ்வோர் ஆண்டும் பெய்கின்ற மழையில் 40 விழுக்காடு வீணாகக் கடலில் கலக்கின்றது.
பூவுலகின் பசுமை மரங்களைப் பார்த்து புன்னகைப் பூக்கும் வான் தாய், ஆனந்தக்கண்ணீர் விடுவதுதான் மழையென்றால், அந்த பொன் நீரை சேமித்து வைத்தாலே, உலகின் பஞ்சம் தீர்ந்துவிடுமே.
மழைநீரை மண்ணுக்கடியில் உறிஞ்சி சேமித்து வைப்பவள் பூமித்தாய். ஆனால் இன்றோ, காணுமிடமெல்லாம் காங்கிரீட் வெளிகள் என்றால் மண்ணுக்கடியில் மழைநீர் செல்வதெப்படி? அன்னையின் இதயம் வறண்டுபோனதற்கு இதுவும் ஒரு காரணம்.
சிலை செய்ய கருங்கல்லும், மழை பெய்ய நல்ல மனசும் வேணுமுன்னு சொல்வாங்க. ஆம், காடுகளைக் காக்கும் நல்ல மனசு நம் ஒவ்வொருவருக்கும் தேவை. மழையை இவ்வுலகிற்கு வரவேற்பதில் உயர்பங்கு வகிப்பவை காடுகள். காடுகளை அழிப்பதால் என்ன நடக்கிறது? தன்னை வரவேற்காத வீட்டிற்கு, எந்த விருந்தினர் வருவார்? தன்னை வரவேற்கும் காடுகள் இருக்குமிடம் நோக்கியே மேகங்களும் செல்கின்றன. நாளைய நீர்வளத்திற்கு இன்றைய முதலீடு மழைநீர் சேமிப்புதான்.
நிலத்தடி நீர் மட்டம் உயரவும், விவசாய நிலங்களில் மண்அரிப்பைதடுக்கவும், மண்ணின் ஈரத்தன்மை காப்பாற்றப்படவும், நகர் புறங்களில் நிறைய இடங்களில் நீர் தேங்குவதை தடுத்து நோய்கள் பரவுவதை தடுக்கவும், மழைநீர் சேகரிப்பு உதவுகிறது.
வான்வழி மிதந்து வரும் மேகக் கூட்டங்களைக் குளிரவைத்து மழையாய் பொழியச் செய்வது மரம். உணர்வோம். மரம் வளர்க்க கரம் கொடுப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்