விதையாகும் கதைகள் : இருக்கும் இடத்தைப் பொறுத்தே மதிப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்
கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். அரங்கத்தில் உற்சாக_ஆரவாரம் எழுந்தது. அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது. வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க வெகுநேரம் பிடித்தது.
கைதட்டல்கள் முடிந்ததும், கண்ணதாசன் கல்லூரி மாணவர்களை நோக்கி,
"இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல. உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ஒரு கவிதை எடுத்துக்கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார். அது மிக நன்றாக இருந்தது. எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன். என் கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை. அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு. ஆக சொல்பவர் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய, சொல்லும் பொருளைப்பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதுதான உண்மை என்று புரிகிறது", என்று கூறி முடித்தார்.