மாற்றுத்திறன் கொண்டோரை அனைத்திலும் உள்ளடக்க...
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
மாற்றுத்திறன் கொண்டோரின் உரிமைகள் என்று சொல்வது, அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய உரிமைகளை முன்னிலைப்படுத்துவது என்ற கருத்துடன், ஐ.நா. நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் டிசம்பர் 3ம் தேதி சிறப்பிக்கப்பட்ட மாற்றுத்திறன் கொண்டோரின் உலக நாள் நாளுக்கென வெளியிட்ட செய்தியில் வெளியிட்டுள்ளார்.
மாற்றுத்திறன் கொண்டோரின் உரிமைகள் என்று சொல்லும்போது, பள்ளிக்குச் செல்லுதல், சமுதாயத்தின் ஓர் அங்கமாதல், நலவாழ்வின் அனைத்து வசதிகளையும் பெறுதல், குடும்பம் அமைத்தல், அரசியல் தளங்களில் பங்கேற்றல், விளையாட்டுக்களில் கலந்துகொள்ளுதல், பயணித்தல் மற்றும் தகுதியான வேலைகளில் பணியமர்த்தப்படுத்தல் என்ற அனைத்தையும் உள்ளடக்கியது என்று கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.
கோவிட்-19 கொள்ளைநோய் அனைவரையும் பாதித்துள்ள வேளையில், மாற்றுத்திறன் கொண்டோர், இந்நோயினால், கூடுதலான துயரங்களையும், அநீதிகளையும் சந்தித்து வருகின்றனர் என்பதை, கூட்டேரஸ் அவர்கள் தன் செய்தியின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அனைவரும் இணைந்து முழு மூச்சுடன் உழைத்தால் மட்டுமே, மாற்றுத்திறன் கொண்டோர் சந்திக்கும் தடைகளையும், அநீதிகளையும், புறக்கணிப்பையும் நீக்க முடியும் என்று கூறியுள்ள கூட்டேரஸ் அவர்கள், இந்த இலக்கை அடைவதற்குரிய வழிகளை உருவாக்குவதில், மாற்றுத்திறன் கொண்டோரின் ஆலோசனைகள் அவசியம் தேவை என்பதையும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
இந்தக் கொள்ளைநோயின் தாக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் கல்வி மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்ற கவலையை, யுனெஸ்கோ அமைப்பின் இயக்குனர், Audrey Azoulay அவர்கள், இந்நாளில், சிறப்பாக நினைவுகூர்ந்துள்ளார்.
1922ம் ஆண்டு ஐ.நா. நிறுவனத்தின் பொது அவையால், டிசம்பர் 3ம் தேதி, மாற்றுத்திறன் கொண்டோரின் உலக நாள் உருவாக்கப்பட்டது.