தேடுதல்

மழை மேகங்கள் மழை மேகங்கள் 

விதையாகும் கதைகள் : மழை பொழிய மறந்த மேகங்கள்...

நல்லது நடக்கும் என்று நம்புவோருக்கு, ஜாதகமும், ஜோதிடமும் தேவையில்லை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த ஓர் ஊருக்கு வந்த ஒரு ஜோதிடர், அடுத்த 10 ஆண்டுகளுக்கு அந்த ஊரில் மழைபெய்யாது என்று சொல்லிவிட்டுச் சென்றார். இதைக் கேட்ட ஊர் மக்கள், மிகவும் மனமுடைந்து, தங்கள் கலப்பைகளை விறகாக உடைத்து, எரித்துவிட்டு, வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தனர்.

ஊரில் ஒரே ஒருவர் மட்டும், தினமும் தன் நிலத்திற்குச் சென்று உழுதுவந்தார். அவர் உழுவதைக் கண்ட மேகங்கள் அவரிடம், "நாங்கள் 10 ஆண்டுகள் மழைபெய்யப் போவதில்லை என்று ஜோதிடர் சொன்னபிறகும் நீ ஏன் உழுதுகொண்டிருக்கிறாய்?" என்று கேட்டன. அதற்கு அந்த விவசாயி, "பத்தாண்டுகள் நான் உழுவதை நிறுத்திவிட்டால், உழுவது எப்படி என்பதே எனக்கு மறந்துவிடும். பிறகு, நீங்கள் மழை பெய்யும்போது, நிலத்தை உழத் தெரியாமல் திகைத்து நிற்பேன். எனவேதான், தொடர்ந்து உழுது வருகிறேன்" என்று பதில் சொன்னார்.

இதைக் கேட்ட மேகங்கள், "ஆஹா, பத்தாண்டுகள் மழை பெய்யாமல் இருந்தால், மழை பொழிவது எப்படி என்பதை நாமும் மறந்துவிடுவோமே!" என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டு, அடுத்த நாளே மழையைப் பொழிந்தன.

நல்லது நடக்கும் என்று நம்புவோருக்கு, ஜாதகமும், ஜோதிடமும் தேவையில்லை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 November 2020, 14:37