தேடுதல்

கடை ஒன்றில் பூனைகள் கடை ஒன்றில் பூனைகள்  

விதையாகும் கதைகள் : பசியுள்ள புலியே வேட்டையாடும்

எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றால், முதலில் அதனைப் பற்றிய பசி, அல்லது, தேவை இருக்க வேண்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

ஒரு நாட்டில்  இளவரசர் ஒருவர் இருந்தார். அவர் சிறந்த போர் வீரர். அவருடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்கு அவர் சிறந்த வீரர்.

அவர் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்து கொண்டிருக்கையில், ஓர் எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினார். அந்த எலி திறமையாகத் தப்பித்துச் சென்றது. உடனே மனம் உடைந்து போனார் இளவரசர்.

அப்போது வந்த அரசர் "ஏன் சோகமாக இருக்கிறாய்? எலியைக் கொல்ல வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே!" என்றார். உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது. அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் அந்த எலி எளிதாக அதனிடம் இருந்து தப்பித்துச் சென்றது. அப்போது அமைச்சர் வந்தார். "நம் நாட்டுப் பூனைகள்தான் எதற்கும் பயனில்லையே...? ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன. எனவே அங்கிருந்து வரவழைப்போம்" என்றார் அமைச்சர். அதேபோல் அந்நாடுகளிலிருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன. ஆனால் அவற்றிடமிருந்தும் அந்த எலி திறமையோடு தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்தது. அங்கே இருந்த அரண்மனைக் காவலர், "இளவரசே! இந்த எலிக்குப்போய் மற்ற நாடுகளின்  பூனையெல்லாம் எதற்கு?  எங்கள்  வீட்டுப் பூனையே போதும்" என்றார். மன்னருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. "என்ன.. அரண்மனையில் வளர்ந்துவரும் பூனையால் முடியாதது, சாதாரண பூனையால் முடியுமா?" என்றார். உடனே இளவரசர் மறித்து, "சரி...எடுத்து வா உனது பூனையை" என்றார். வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தார் காவலர். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் கவ்விச் சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெரிய ஆச்சரியம். "என்ன இது அதியசம்! நாடுகளின் அரண்மனைகளில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை, எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது? எப்படி சாத்தியம்? என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்?" என்று வியந்தவாறே கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார்.

அதற்குக் காவலாளி, *"பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே. என் பூனைக்கு நிறையப் பசி அவ்வளவுதான்" என்றார். இந்தப் பதில், இளவரசரின் மனதில் தைத்தது. அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்குப் பசி என்பதே என்னவென்று தெரிய வாய்ப்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படிப் பிடிக்க முடியும்?.

ஆம். எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றால், முதலில் அதனைப் பற்றிய பசி, அல்லது, தேவை இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தைக் கச்சிதமாகச் செய்து முடிக்க முடியும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 August 2020, 12:54