தேடுதல்

நேர்முகத்தேர்வுக்கு காத்திருப்போர் நேர்முகத்தேர்வுக்கு காத்திருப்போர் 

விதையாகும் கதைகள் : நேர்முக தோல்விகள்

பணியில் வீண் அரட்டை அடிக்கமாட்டேன். ஏனென்றால், எனக்குப் பேச முடியாது. எனக்குக் கேட்கும் திறன் இல்லாததால், மற்ற சப்தங்களால் கவனம் சிதறும் வாய்ப்பு இல்லை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

இரவிச்சந்திரனுக்கு இது ஏழாவது நேர்முகம்! ஏற்கெனவே காது கேட்காத, வாய்பேச முடியாத நிலையில் இருக்கும் அவனுக்கு வேலையில்லாதது கூடுதல் வேதனை.

இத்தனைக்கும் ஒவ்வொருமுறையும் எழுத்துத் தேர்வில் தன் முழுத் திறமையையும் காட்டுவான். கூடவே, நேர்முகத்தில் தன்னால் பேச முடியாது என்பதையும் அதிகாரிகள் கேட்கும் கேள்விகளைக் காதால் கேட்க முடியாது என்பதையும் எழுதிக் காட்டுவான். அவர்கள் திருப்தி அடையாமல், நிராகரித்து அனுப்பிவிடுகிறார்கள்.

இரவிச்சந்திரனின் வெறுப்பெல்லாம், ‘விண்ணப்பிக்கும்போதே நம்முடைய குறைகளைச் சொல்லித்தானே விண்ணப்பிக்கிறோம். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று நம்பிக்கையோடு இருக்கும்போது இப்படிச் சொல்கிறார்களே’ என்பதுதான். இந்த முறை நேர்முகத்தில் தேர்வு செய்யப்படாவிட்டால் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்ற முடிவோடு இருந்தான்.

அவனுடைய முறை வந்தது. நேர்முகம் கண்டவர், சான்றிதழ்களை வாங்கிப் பார்த்தார். சான்றிதழ்களுக்கு நடுவே இருந்த, ‘என்னால் பேச முடியாது, மற்றவர்கள் சொல்வதைக் காதால் கேட்க முடியாது’ என்று எழுதியிருந்த காகிதமும் இருந்தது. அதைப் படித்துவிட்டு, நாலாக, எட்டாகக் கிழித்துப் போட்டார் அந்த அதிகாரி. கோபத்தோடு அவரைப் பார்த்தான் இரவிச்சந்திரன்.

அந்த அதிகாரி சலனமே இல்லாமல், ஒரு வெள்ளைத் தாளை எடுத்து ஏதோ எழுதினார். இவனிடம் நீட்டினார்.

‘என்னைப் பணியில் சேர்த்துக்கொண்டால் வீண் அரட்டை அடிக்க மாட்டேன். ஏனென்றால், எனக்குப் பேச முடியாது. எனக்குக் கேட்கும் திறன் இல்லாததால், மற்ற சப்தங்களால் கவனம் சிதறும் வாய்ப்பு இல்லை. எவ்வளவு கடினமான வேலையாக இருந்தாலும் மனதை ஒருமுகப்படுத்தி என்னால் செய்ய முடியும். உங்கள் கேள்விகளுக்கு நான் தயார்!’ என்று அவர் எழுதிக் கொடுத்தார். அதைப் பார்த்தவுடன் ஓர் உண்மையை எப்படிச் சொல்ல வேண்டும் என்ற வழி புரிந்தது இரவிச்சந்திரனுக்கு! கண்களில் நீர் கசிய அவரை நன்றியோடு பார்த்தான்.

‘யூ ஆர் அப்பாயின்டட்!’ என்று, அந்த அதிகாரியின் உதடு முணுமுணுப்பது இரவிச்சந்திரனுக்குப் புரிந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 July 2020, 14:29