போர்களை நிறுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட...
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
போர், அடக்குமுறை, மற்றும், ஏனையப் பிரச்சனைகளால், உலக அளவில் தங்கள் வீடுகளைவிட்டு புலம்பெயர்ந்துள்ள ஏறத்தாழ எட்டு கோடி மக்களைப் பாதுகாப்பதற்கு, நாடுகள் இன்றியமையாத கடமையைக் கொண்டுள்ளன என்று, ஐ.நா. நிறுவனத்தின் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.
ஜூன் 20, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்படும் புலம்பெயர்ந்தோர் உலக நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், தங்களின் பொருளாதார மற்றும், பாதுகாப்பிற்கு எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில், புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோருக்கு ஆதரவளித்துவரும் நாடுகள், மற்றும், குழுமங்களைப் பாராட்டியுள்ளார்.
நன்றிக்கடன்பட்டுள்ள இந்நாடுகளுக்கு, நமது ஆதரவும், முதலீடுகளும் வழங்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையில் மக்கள் புலம்பெயரக் காரணமாக இருக்கும், போர்கள் மற்றும், அடக்குமுறைகளை நிறுத்துவதற்கு, நம்மால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு, புலம்பெயர்ந்தோர் உலக நாளில் உறுதிமொழி எடுப்போம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவிட்-19 நெருக்கடி
கோவிட்-19 உருவாக்கியுள்ள நெருக்கடியில், நாடுகளுக்குள்ளேயும், நாடுகளுக்கு வெளியேயும், புலம்பெயர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களுக்கே உதவிகள் அதிகம் தேவைப்படுகின்றன என்றும், கூட்டேரஸ் அவர்கள், கூறியுள்ளார்.
பங்களாதேஷ் முகாம்கள் தொடங்கி, ஐரோப்பாவில் இயங்கும் மருத்துவமனைகள் வரை, செவிலியர், மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும், ஏனைய தொழிலாளர்களாக, புலம்பெயர்ந்தோர் பணியாற்றுகின்றனர், இவர்கள், தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, தங்களுக்கு ஆதரவுகொடுத்துள்ள சமுதாயங்களுக்கும் உதவி வருகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார், ஐ.நா. பொதுச்செயலர் கூட்டேரஸ்.
UNHCR எனப்படும் ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் அறிக்கையின்படி, 2019ம் ஆண்டில் இம்மக்களின் எண்ணிக்கை 7 கோடியே 95 இலட்சமாக உயர்ந்தது என்றும், கடந்த ஆண்டில் மட்டும், ஒரு கோடிப் பேர் புலம்பெயர்ந்தனர் என்றும் தெரிய வருகிறது. (UN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்