தேடுதல்

தங்களுக்குள் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை மரங்கள் தங்களுக்குள் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை மரங்கள்  

விதையாகும் கதைகள் : மரங்கள் தங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை

உனக்கே விடை தெரியும் கேள்விகளுக்கு பதில்களைத் தேடாதே. இறைவனின் படைப்பில் அனைத்திற்கும் பதில்கள் உள்ளன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

தன்னை உயர்வாக மதித்துக்கொள்ளக்கூடிய சமுராய் போர் வீரர் ஒருவர், ஸென் ஆசிரியர் ஒருவரை சந்திக்கச் சென்றார். சமுராய் போர் வீரர் தன் வீரதீரச் செயல்களால் மக்களிடத்தில் புகழும் செல்வாக்கும் பெற்றவர். இவர், ஸென் ஆசிரியரின் தோற்ற அழகையும், இனிய பண்பையும் அருள் நிறைந்த மனத்தையும் பார்த்தவர், திடீரென தன்னை தாழ்வு மனப்பான்மையுடன் நினைக்க ஆரம்பித்தார்.

சாமுராய் ஆசிரியரிடம், "கொஞ்சம் நேரத்திற்கு முன்புவரை நன்றாக இருந்த நான் திடிரென எதற்காக என்னைத் தாழ்வு மனப்பான்மையுடன் பார்க்கிறேன்? உங்களது இருப்பிடத்திற்கு வந்ததும் ஏன் நான் என்னைத் தாழ்வாக நினைக்கவேண்டும். இதற்கு முன்பு எனக்கு இந்த மாதிரியான மனநிலை வந்ததில்லையே. நான் சாவினையே பலமுறை மகிழ்ச்சியுடன் சந்தித்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது ஏன் நான் பயப்பட வேண்டும்?" என்று கேட்டார்.

ஆசிரியரோ, "பொறுத்திரு. எல்லாரும் இங்கிருந்து சென்றதும் உனக்குப் பதில் சொல்லுகிறேன்" என்றார்.

பலரும் ஆசிரியரைப் பார்க்க வருவதும் போவதுமாக இருந்தனர். காத்திருந்ததாலேயே களைப்படைந்து சோர்ந்து போனார் சாமுராய். மாலையானதும் அனைவரும் சென்றுவிட்டனர். சாமுராய், "இப்பொழுது உங்களால் என் கேள்விக்கு பதில் அளிக்க முடியுமா?" என்று கேட்டார். ஆசிரியரோ, "வெளியே வா" என்று, அவரை அழைத்துக்கொண்டு திறந்த வெளிக்குச் சென்றார். அது ஒரு பௌர்ணமி நாள். தொடுவானத்திலிருந்து முழுநிலவானது மறைகின்ற கதிரவனின் ஒளிபட்டு அழகுடன் சிவந்து ஒளிர்ந்தது. "அங்கே தெரிகின்ற மரங்களைப் பார். அதோ அந்த மரமானது வானத்தை தொட்டுவிடும் உயரத்திற்கு வளர்ந்திருப்பதைப் பார். அதன் பக்கத்திலேயே இன்னொரு சிறிய மரம் வளர்ந்திருப்பதைப் பார். என்னுடைய ஜன்னலின் வழியாக பல ஆண்டுகளாக அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவைகளுக்குள் எந்த பேதமும் இருந்ததில்லை. அந்த சிறிய மரம், பெரிய மரத்தினைப் பார்த்து 'ஏன் தாழ்ந்து போனவனாக என்னை நினைத்துக்கொள்கிறேன்?' என்று ஒருபோதும் கேட்டதில்லை. இது சிறிய மரம், அது பெரிய மரம், ஏன், அவைகளுக்குள் காதோடு காதாக குசுகுசுவென பேசியதை என்னால் ஒரு நாளும் கேட்க முடியவில்லை?" என்றார்.

சாமுராய் ஆசிரியரை நோக்கி, "ஏனென்றால் அவைகள் தங்களுக்குள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதில்லை" என்றார்.

ஆசிரியர் சாந்தமான குரலில், "நீ என்னிடம் பதிலினை எதிர்பார்க்க வேண்டாம். உனக்கே பதில் தெரிந்திருக்கிறது" என்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 June 2020, 12:26