தேடுதல்

ஆஸ்கார் விருதை குறித்து நிற்கும் சிலைகள் ஆஸ்கார் விருதை குறித்து நிற்கும் சிலைகள்  

விதையாகும் கதைகள்: மனத்திருப்திக்காக வேலைசெய்வதில் மகிழ்ச்சி

செய்யும் தொழிலில் பிழையேற்படலாம், ஆனால், பிழையை மறைக்காமல் வெளிப்படையாக இருக்க விரும்புவதே உயர் பண்பு.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

ஒரு கோவிலில் ஒரு சிற்பியின் முயற்சியால் பல்வேறு சிலைகள் வடிவமைக்கப்பட்டுக்கொண்டு இருந்தன. ஒரு சிற்பியின் அருகில் எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரியாக இரண்டு சிலைகள் இருந்தன.

அதைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர், “ஒரே மாதிரியான இரண்டு சிலைகளை உருவாக்குகிறீர்களா அய்யா?” என்றார்.

சிற்பி சொன்னார், “எங்களுக்கு ஒரே ஒரு சிலையே போதுமானது. ஆனால் முதலில் செய்யப்பட்ட சிலையில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதனால் இரண்டாவது சிலையை உருவாக்குகிறேன்” என்று.

வழிப்போக்கர் நன்றாக இரண்டு சிலைகளையும் உற்றுக் கவனித்துவிட்டு, “எந்த சேதமும் எனது கண்ணுக்குத் தெரியவில்லையே” என கூறினார்.

தனது வேலையில் கவனத்துடன் இருந்த சிற்பி சொன்னார், “அந்தச் சிலையின் மூக்கின் அருகில் ஒரு சிறிய சேதமுள்ளது.”என்று.

”இந்தச் சிலையை எங்கே நிறுவப்போகிறீர்கள்?” என வழிப்போக்கர் கேட்க, “50 அடி உயரத்தில் மேலே நிறுவ இருக்கிறோம்” என்பது சிற்பியின் பதிலாக இருந்தது.

“ஐம்பதடி உயரத்தில் இருக்கப்போகிற சிலையின் மூக்கினருகில் இருக்கும் இந்தச் சிறிய சேதத்தை யார் கவனிக்கப் போகிறார்கள்?” என வழிப்போக்கர் வியந்து கேட்க, தனது வேலையை சற்று நிறுத்திவிட்டு வழிப்போக்கரிடம் புன்னகையுடன் சிற்பி சொன்னார்,  “யார் கவனிக்கப் போகிறார்கள்? - எனக் கேட்கிறீர்கள். வேறு யாருக்கும் அந்தச் சேதம் தெரிவதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. எனது கடமையில் இப்படி ஒரு சேதத்தை நான் உருவாக்கியதை அடுத்தவரிடம் மறைப்பது எனக்குப் பிடிக்கவில்லை. சேதம் சிறியதா? பெரியதா? என்பது பற்றிக் கவலையில்லை. செய்யும் தொழிலில் பிழையேற்படலாம், ஆனால், பிழையை மறைக்காமல் வெளிப்படையாக இருக்கவே விரும்புகிறேன்” என்று.

அடுத்தவருக்காக வேலைசெய்வதில் கிடைக்கும் இன்பத்தைவிட, தன் மனத்திருப்திக்காக வேலைசெய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சியே அதிகம்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 June 2020, 12:13