தேடுதல்

நாணயங்கள் நாணயங்கள் 

விதையாகும் கதைகள் : கிடைப்பதில் மகிழ்ச்சி, இருப்பதில் திருப்தி

ஒன்பது தங்கக் காசுகள் இருக்கும் பையை வழியில் கண்டெடுத்த ஒருவன், கண்டிப்பாய் பத்தாவது காசு எங்காவது விழுந்து கிடக்கும் என்று தேடத் துவங்கினான், இன்னும் தெடிக்கொண்டே இருக்கிறான்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஞானி ஒருவரிடம் வந்த மனிதர் ஒருவர், ‘‘குருவே, என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. மனசு எதையோ தேடிக்கிட்டே இருக்கு. ஆனால், என் பக்கத்து வீட்டுக்காரன் ரொம்ப சந்தோஷமா இருக்கான். எந்தக் கவலையுமில்லாம இருக்கான். எப்படினே தெரியல. என்னால அப்படி இருக்க முடியல.’’ என்றார்.

ஞானி சற்று யோசித்தார். அவரிடம் ஒரு பையைக் கொடுத்தார்.

‘‘இதில் ஒன்பது தங்கக் காசுகள் இருக்கின்றன. இதை உன் பக்கத்து வீட்டுக்காரரின் வாசலில் போடு. அதன்பிறகு என்ன நடக்கிறது என்று சொல்’’ என்றார்.

ஞானி சொன்னபடியே செய்தார் வந்தவர். மூன்று நாட்கள் சென்று ஞானியிடம் வந்தார்.

‘‘குருவே, அவன் நிம்மதியே போச்சு’’ என வந்தவர் கூற,  ‘‘அப்படியா, ஏன்? அவனுக்குத்தான் ஒன்பது தங்கக் காசுகள் கிடைத்திருக்குமே...’’ என வினவினார் ஞானி.

‘‘அதுதான் பிரச்சனையே. விடியற் காலையில் அவன் வீட்டு வாசலில் காசுகளைப் போட்டுவிட்டேன். எழுந்துவந்து பார்த்த அவன், தங்கக் காசுகளைப் பார்த்ததும் குஷியாகிவிட்டான். ஆனால், ஒன்பது காசுகள்தான் இருப்பதைப் பார்த்ததும், கண்டிப்பாய் பத்தாவது காசு எங்காவது விழுந்து கிடக்கும் என்று தேடத் துவங்கினான். வீட்டில் தேடினான், தெருவில் தேடினான், போகிற வருகிறவர்களிடமெல்லாம் கேட்டான். இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறான்’’, என்றார் அவர்.

‘‘இருப்பதில் திருப்தி அடையாவிட்டால், நிம்மதி போய் விடும் புரிகிறதா? இது, அவனுக்கல்ல, உனக்குத் தரப்பட்ட பாடம்’’, என்றார் ஞானி.

கிடைப்பதில் மகிழ்ச்சியும், இருப்பதில் திருப்தியும், வாழ்வில் நிம்மதிக்கு அவசியம். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 May 2020, 13:06