விதையாகும் கதைகள் : புரிதலா? தெளிதலா? எது முக்கியம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்
ஒருவர் தினமும் கோவிலுக்கு மறைவிளக்கம் கேட்பதற்காகச் சென்று, இரவு தாமதமாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். ஓர் இரவு அவர் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது வெறுப்பாகிப்போன அவரது மனைவி, "அப்படி என்னதான் மறைவிளக்கத்துலே கொட்டிக்கிடக்கு? தினமும் அங்க போயிட்டு வாறீங்களே, உங்களுக்கு என்ன புரிந்தது சொல்லுங்க" என்று கேட்டார்.
அதற்கு அந்த மனிதர், "எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனா, போயி கேட்டு வருவது நன்றாகவே இருக்கு" என்றார்.
கோபமடைந்த மனைவி, " முதல்ல வீட்டில இருக்கிற சல்லடையில் கொஞ்சம் தண்ணீர் வீட்டுக் கொண்டு வாங்க" என்றார்.
அவரும் சல்லடையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு முழுவதும் சிந்தியபடியே வந்தார். மனைவியிடம் வந்தபோது தண்ணீர் இல்லாமல் வெறும் சல்லடை மட்டுமே இருந்தது.
உடனே மனைவி," தினமும் லேட்டா வறீங்க, ஏன்னு. கேட்டா, மறைவிளக்கத்துக்குப் போனேன் எங்கறீங்க...... என்ன சொன்னாங்கன்னு கேட்டா..... ஒன்னும் தெரியல்லேன்னு சொல்லறீங்க. நீங்க மறைவிளக்கம் கேட்கப்போற இலட்சணம் இதோ இந்த சல்லடையில் ஊத்தின தண்ணீ மாதிரித்தான்..எதுக்கும் பயன் கிடையாது", என்று கொட்டித் தீர்த்தாள்.
அவரோ தன் மனைவியைப் பார்த்து, "நீ சொல்லறது சரிதான். சல்லடையில் தண்ணீர் வேணா நிரப்ப முடியாமப் போகலாம். ஆனா, அழுக்கா இருந்த சல்லடை இப்போ பாரு.. நல்லா சுத்தமாயிடுச்சு. அதுபோல, மறைவிளக்கத்தில சொல்ற விஷயம் வேணா எனக்குப் புரியாமலிருக்கலாம். ஆனா, என்னோட மனசில இருக்கிற அழுக்கையெல்லாம் படிப்படியாக அது அகற்றுவதை என்னால் நன்கு உணர முடிகிறது", என்று சொன்னார்.
புரிதலைவிட தெளிதலே எப்போதும் முக்கியம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்