விதையாகும் கதைகள்: உண்மையான எதிரி யார்?
மேரி தெரேசா: வத்திக்கான்
இராஜனும், இராக்கியும் நல்ல நண்பர்கள். இவர்கள் மீது பொறாமை கொண்ட ஒருவன், அவர்கள் மீது திருட்டுப் பழியும் சுமத்தி, அரசரிடமும் புகார் செய்தான். அவ்விருவரையும் உடனே அழைத்துவருமாறு, அரசர் காவலர்களுக்கு ஆணையிட்டார். காவலர்கள் அவ்விருவரையும் அரசரிடம் இழுத்து வந்தார்கள். தன்னிடம் வந்த அவ்விருவரையும் தீர விசாரிக்காமல் சிறைத்தண்டனை வழங்கினார் அரசர். தாங்கள் எக்குற்றமும் செய்யவில்லை என எவ்வளவோ மன்றாடியும் அரசர் அவர்களை சிறையில் அடைத்துவிட்டார். ஆனால் அடுத்த நாளே அரசருக்கு உண்மை தெரியவந்தது. எனவே சிறைக்குச் சென்று, நான் உங்களைச் சரியாக விசாரிக்காமல் தண்டனை அளித்துவிட்டேன். என்னை தயவுசெய்து மன்னித்து விடுங்கள், இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது என உறுதியளித்து அவர்களை விடுதலை செய்தார் அரசர். இருவரும் சிறையிலிருந்து வெளியேறி தங்கள் வீடுகளுக்குச் சென்றனர். போகும் வழியில், இராஜன், இராக்கியிடம், நீ அரசரை மன்னித்துவிட்டாயா? எனக் கேட்டார். அதற்கு இராக்கி, நான் ஏன் மன்னிக்க வேண்டும்?, அரசர்தான் நம்மை விடுதலை செய்துவிட்டாரே, நாம் செய்யாத குற்றத்திற்காக தண்டனையும் வழங்கி சிறையிலும் அடைத்துவிட்டாரே என்று சொன்னார். எனவே நீ அரசரை மன்னிக்கவில்லை என மீண்டும் கேட்டார் இராஜன். இல்லை என்றார் இராக்கி. அப்படியானால் நீ இன்னும் அரசருடைய சிறையில்தான் இருக்கிறாய். என்றார் இராஜன்.
*நம்மை வெறுப்பவர்கள் நம் பகைவர்கள் இல்லை, நம்மால் வெறுக்கப்படுபவர்களே நம் உண்மையான பகைவர்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்