புலம்பெயர்ந்தோர் உலக நாளுக்கு ஐ.நா. செய்தி
மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்
புலம்பெயர்ந்தோர் உலக நாளுக்கென, ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், மனிதரின் புலம்பெயர்வு, பொருளாதார வளர்ச்சி, சுயஆற்றலால் இயங்கும் சக்தி, புரிந்துகொள்தல் ஆகியவற்றின், உறுதியான உந்து சக்தியாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
புலம்பெயர்வு, இலட்சக்கணக்கான மக்கள் புதிய வேலைவாய்ப்புக்களைத் தேடுவதற்கு உதவுவதால், இது, அம்மக்களின் சொந்த நாடுகளுக்கும், அவர்கள் குடியேறியுள்ள நாடுகளுக்கும், மிகுந்த பலன்களை அளிக்கின்றது எனவும், கூட்டேரெஸ் அவர்களின் செய்தி கூறுகின்றது.
அதேநேரம், புலம்பெயர்வு சரியான விதிமுறையில் இடம்பெறவில்லையெனில், அந்நிலை, புலம்பெயரும் மக்களுக்குள்ளும், சமூகங்களுக்கு இடையேயும், ஆழமான பிரிவினைகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரித்துள்ளார், கூட்டேரெஸ்.
மர்ரகேஷ் நகரில் கொண்டுவரப்பட்ட, புலம்பெயர்ந்தோர் குறித்த உலகளாவிய ஒப்பந்தம் காட்டும் பாதையில் நடப்பதற்கு, இந்த உலக நாளில் முயற்சிப்போம் என்றும், ஐ.நா. பொதுச்செயலர் கூட்டேரெஸ் அவர்கள், கேட்டுக்கொண்டுள்ளார்.
டிசம்பர் 18, புலம்பெயர்ந்தோர் உலக நாள் (UN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்