இமயமாகும் இளமை : பெரியோரின் எளிமை
மேரி தெரேசா - வத்திக்கான்
அந்தப் பிரமுகர் ஒருமுறை மதுரைக்கு வருகை தந்தார். மத்திய அமைச்சரான பிறகும்கூட, எளிமையைக் கடைப்பிடித்த அவர் தங்குவதற்கு, இரயில் நிலையத்தில் ஓர் அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக இரயில் மதுரையை அடைந்துவிட்டதால், அப்போது அவரை வரவேற்க யாரும் வரவில்லை. இரயிலை விட்டிறங்கிய அவர், தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறை பற்றி கேட்டறிந்து, அந்த அறைக்குச் சென்றார். ஆனால், அந்த அறையின்முன் நின்ற காவலாளி, அவரைத் தடுத்து நிறுத்தி, இந்த அறை, இரயில்வே அமைச்சருக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, எனவே நீங்கள் இங்குச் செல்ல முடியாது எனக் கூறிவிட்டார். நான்தானப்பா அந்த அமைச்சர் என, அந்தப் பிரமுகர் சொல்லியும், காவலாளி அவரை அறைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதற்குள், அவரை வரவேற்க வந்தவர்கள், அந்த அறைக்குமுன் நடப்பதைப் பார்த்துவிட்டு, வேகமாக ஓடிவந்து, காவலாளியிடம் விவரத்தைக் கூறினர். அந்தப் பிரமுகரிடமும் அவர்கள் மன்னிப்புக் கேட்டனர். அவரும் அந்த நிகழ்வைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், சிரித்துக்கொண்டே அறையினுள் சென்றார். அத்தனை சிறப்புகள் மிக்க அந்தப் பெரிய மனிதர்தான், இந்தியாவின் இரண்டாவது பிரதமராகப் பணியாற்றிய, அமரர் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் (2,அக்.1904-11,சன.1966). காந்திஜி அவர்களின் சீடரான இவர், பிறந்த நாள் அக்டோபர் 2. இந்நாள், இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்டது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்