தேடுதல்

விசுவாசக் கோட்பாட்டு திருப்பீடத்துறை விசுவாசக் கோட்பாட்டு திருப்பீடத்துறை 

ஆசீர் வழங்குவது என்பது அங்கீகாரத்தின் அடையாளமல்ல

கிறிஸ்தவ ஒழுக்கமுறைக் கோட்பாடுகளுக்கு இயைந்தமுறையில் வாழாமல், அதேவேளை, திருஅவையின் ஆசீரை தாழ்மையுடன் இறைஞ்சும் தம்பதியருக்கு இறையாசீரை வழங்குவது இயலக்கூடியதே

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஒரே பாலினத் தம்பதியருக்கு ஆசீரை வழங்குவது என்பது அவர்களின் ஒன்றிணைந்த வாழ்வை அங்கீகரிப்பதன் அர்த்தமாக நோக்கப்படக் கூடாது என மீண்டும் ஒருமுறை, Fiducia supplicans என்ற திருஅவைக்கோட்பாட்டு அறிக்கை குறித்து விளக்கமளித்துள்ளது திருஅவையின் விசுவாசக் கோட்பாட்டுத் துறை.

ஒரே பாலினத் தம்பதியருக்கு இறைஆசீரை வழங்க மறுக்காதிருப்பது, அவர்களின் ஒன்றிணைந்த வாழ்வு நிலையை திருஅவைக்குள் அங்கீகரிப்பதாகாது என மீண்டும் வலியுறுத்தும் விசுவாசக் கோட்பாடுகளுக்கான திருப்பீடத்துறை, பல்வேறு தலத் திருஅவைகளில், குறிப்பாக ஐரோப்பிய திருஅவையில் எழுப்பபட்டுள்ள சந்தேகங்கள் தொடர்பான முழு விளக்கத்தையும் வெளியிட்டுள்ளது.

ஒரே பாலினத் தம்பதியருக்கு ஆசீர் வழங்குவது என்பது இயலக்கூடிய ஒன்றே எனவும், அதேவேளை, அவ்வாறு ஆசீர் வழங்குவது அங்கீகரிக்கப்பட்ட எவ்வித திருவழிபாட்டுச் சடங்கு முறைகளும் அற்றதாக, திருமணம் என்ற எண்ணப் போக்கைத் தராததாக, அதாவது திருமணச் சடங்கு முறைகள் அற்றதாக இருக்க வேண்டும் என விசுவாசக் கோட்பாடுகளுக்கான திருப்பீடத்துறை மீண்டும் வெளியிட்டுள்ள  அறிக்கையில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fiducia supplicans என்ற பெயரில் டிசம்பர் மாதம் 18ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள திருஅவைக் கோட்பாட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளவைகளின் நோக்கம், திருமணம் குறித்த திருஅவைக் கோட்பாட்டில் எவ்வித மாற்றத்தையும் குறிப்பதாக இல்லை எனவும், ஒரே பாலினத் தம்பதியருக்கு ஆசீர் வழங்குவது என்பது, அவர்களின் ஒன்றிப்பு வாழ்வை அங்கீகரிப்பதன் அர்த்தமாகாது, மாறாக, இறையாசீர் எவருக்கும் மறுக்கப்படக்கூடாது என்பதை அடிப்படையாகக் கொண்டது எனவும் கூறுகிறது.

அடிப்படை ஒழுங்குமுறைகளை மீறி வாழும் தம்பதியர் திருஅவையிடம் ஆசீரைக் கேட்கும்போது, அதை அருள்பணியாளர்கள் வழங்குவதில் தடையில்லை எனவும், மேய்ப்புப்பணியின் நெருக்கத்தைக் காட்டும் இத்தகைய நடவடிக்கை, எச்சூழலிலும் திருமணத்திற்குரிய திருவழிபாட்டுச் சடங்குமுறைகளை பிரதிபலிப்பதாக இருக்கக்கூடாது என மீண்டும் விளக்கமளிக்கும் Fiducia supplicans  புதிய கோட்பாடு, கிறிஸ்தவ ஒழுக்கமுறைக் கோட்பாடுகளுக்கு இயைந்தமுறையில் வாழாமல், அதேவேளை, திருஅவையின் ஆசீரை தாழ்மையுடன் இறைஞ்சும் தம்பதியரை வரவேற்று இறையாசீரை வழங்குவது இயலக்கூடியதே எனவும் உரைக்கிறது.

திருமணத்தை நிறுவுபவை எவை என்பதற்கும் திருமணத்திற்கு எதிரானவை எவை என்பவைகளுக்கும் இடையே குழப்பங்களைத் தருபவைகளாக ஒரே பாலினத் தம்பதியருக்கு வழங்கும் ஆசீரோடு தொடர்புடைய சடங்குமுறைகள இருக்கக்கூடாது என்பதையும் மீண்டும்  தெளிவாகத் தெரிவிக்கிறது திருஅவையின் புதிய விளக்க அறிக்கை.

கத்தோலிக்க திருஅவைக் கோட்பாடுகளின்படி, திருமணத்திற்குப்பின் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இடம்பெறும் உடலுறவே சட்டபூர்வமானது என்பதையும் தெளிவாக எடுத்துரைக்கின்றது Fiducia supplicans என்ற அறிக்கை.

ஓர் ஆசீரைப் பெறுவதற்கும் ஓர் அருளடையாளத்தைப் பெறுவதற்கும் இடையேயான வித்தியாசம் குறித்தும்,  பல்வேறு வகையான ஆசீர்களின் அர்த்தங்கள் குறித்தும் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

இப்புதிய விளக்க அறிக்கையில், Fiducia supplicans திருஅவைக்கோட்பாட்டு அறிக்கைக் குறித்த விளக்கம், திருச்சட்டத்திற்கு எதிராக இணைந்து வாழ்வோருக்கு வழங்கப்படும் ஆசீர் குறித்து சில மறைமாவட்டங்களில் எழுந்துள்ள நடைமுறைப் பிரச்சனைகள், சில நாடுகளில் காணப்படும் இக்கட்டான சூழல்கள், Fiducia supplicans கோட்பாட்டில் காணப்படும் புதுமைகளின் உண்மைத் தன்மை, இந்த மேய்ப்புபணிச் சார்ந்த இறையாசீர் தன்னை துல்லியமாக வெளிப்படுத்துதல், திருஅவையின் மறைக்கல்வி என பல்வேறு தலைப்புக்களில், ஒரே பாலினத் தம்பதியருக்கான இறையாசீர் குறித்து விரிவாக தன்னிலை விளக்கமளித்துள்ளது விசுவாசக் கோட்பாட்டிற்கான திருப்பீடத்துறை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 January 2024, 14:44