அங்கோலாவில் திருப்பீடச் செயலருக்கு வரவேற்பு
மெரினா ராஜ் – வத்திக்கான்
உலகளாவிய திருஅவைக்கும் அங்கோலா நிலத்திற்கும் ஆயர் திருநிலைப்பாட்டு நிகழ்வு ஒரு முக்கியமான நிகழ்வு என்றும், திருத்தந்தையால் அங்கோலாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருப்பீடத்தூதுவர் ஆயர் Germano Penemote என்று கூறியுள்ளார் கர்தினால் பியத்ரோ பரோலின்.
ஆகஸ்ட் 12 சனிக்கிழமை அங்கோலாவில் நடைபெற்ற ஆயர் Germano Penemote அவர்களின் ஆயர் திருநிலைப்பாட்டுத் திருநிகழ்வில் பங்கேற்று சிறப்பிப்பதற்காக ஆப்ரிக்காவின் அங்கோலாவிற்கு சென்று செய்தியாளர்களுக்கு பதிலளித்தபோது இவ்வாறு கூறியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்.
ஜூன் 16 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால், பாகிஸ்தான் நாட்டிற்கான திருப்பீடத்தூவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயர் Germano Penemote அவர்கள், திருத்தந்தையின் பிரதிநிதியாக இருந்து செயல்படுவதால் அங்கோலாவிற்கும் உரோமிற்கும் ஓர் உறவு உள்ளது என்றும் எடுத்துரைத்துள்ளார் கர்தினால் பரோலின்.
ஆப்ரிக்காவிற்கு பலமுறை சென்றுள்ளபோதும் அங்கோலாவிற்கு வருவது இதுவே முதன் முறை என்று கூறியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், அங்கோலா மக்களை சந்திப்பதில் தான் பெரிதும் மகிழ்வதாகவும், திருத்தந்தையின் ஆசீரை அங்கோலா மக்களுக்குக் கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உரோமிலிருந்து ஆப்ரிக்காவின் லுவாண்டா விமானத்தளத்தை வந்தடைந்த கர்தினால் பரோலின் அவர்கள், அரசு அதிகாரிகள், தலத்திருஅவைத்தலைவர்கள், துறவறத்தார் மற்றும் பொது நிலையினரால் பாட்டு, நடனம் மற்றும் பாரம்பரிய உடைகளுடன் மகிழ்வுடன் வரவேற்கப்பட்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்