16ஆவது உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்கேற்போர்
மெரினா ராஜ் – வத்திக்கான்
உலகெங்கிலும் உள்ள ஆயர்கள் ஒன்றாக இணைந்து திருத்தந்தையின் தலைமையின் கீழ் திருஅவை செயல்பாடுகளை சீர்தூக்கிப் பார்க்கும் வகையில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் தொடரில் பங்கேற்போர் பற்றிய பெயர்ப்பட்டியலானது வெளியிடப்பட்டுள்ளது.
ஜூலை 7 வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இப்பெயர்ப்பட்டியலின்படி உலக ஆயர்கள் மாமன்றத்தின் தலைவராக திருத்தந்தை பிரான்சிஸ், மற்றும் செயலராக கர்தினால் மாரியோ கிரேக் அவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள பட்டியலில் இந்திய ஆயர் பிரதிநிதிகள் நால்வரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
கோவா மற்றும் டாமன் உயர்மறைமாவட்ட பேராயர் கர்தினால் பிலிப்பு நேரி ஃபெராவோ, சென்னை மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, கண்ணூர் ஆயர் அலெக்ஸ் ஜோசப் வடகும்தலா, ஹதராபாத் உயர்மறைமாவட்ட பேராயர் கர்தினால் அந்தோணியோ பூலா ஆகியோர் உலக ஆயர்கள் மாமன்றத்தில் இந்திய ஆயர் பிரதிநிதிகளாகப் பங்கேற்க உள்ளனர்.
இலங்கையின் ஆயர் பிரதிநிதியாக Galle ஆயர் Raymond Kingsley WICKRAMASINGHE அவர்களும், பாகிஸ்தான் ஆயர் பிரதிநிதியாக Quetta மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Khalid REHMAT, O.F.M. அவர்களும் பங்கேற்க உள்ளனர்.
2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ஆம் தேதி புதன்கிழமை முதல் 29 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ள உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் தொடரின் பங்கேற்பாளர்களாக அருள்பணியாளர்கள் இருபால் துறவறத்தார் மற்றும் பொது நிலையினரும் கலந்து கொள்ள இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்