பன்னாட்டுக் காரித்தாஸ் அமைப்பின் தலைவர் பேராயர் Tarcisio Isao Kikuchi
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக் கூடியவர்களை வரவேற்கவும், சேவை செய்யவும், பாதுகாக்கவும் அவர்களுக்குத் துணையாகவும் அனைவரும் முன்னணியில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் டோக்கியோவின் பேராயரும் பன்னட்டுக் காரித்தாஸ் அமைப்பின் தலைவருமான பேராயர் Tarcisio Isao Kikuchi.
கடந்த வாரம் உரோமில் கூடிய பன்னாட்டுக் காரித்தாஸ் அமைப்பின் 22-வது பொதுப்பேரவைக் கூட்டத்தின் போது பேராயர் டார்சிசியஸ் ஐசாவோ கிகுச்சி புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
1995-ஆம் ஆண்டு முதல் காரித்தாஸ் பணிகளுக்காகத் தன்னை அர்ப்பணித்த பேராயர் கிகுச்சி அவர்கள், “ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக் கூடியவர்களை வரவேற்கவும், உடன் செல்லவும், பணியாற்றவும், பாதுகாக்கவும் காரித்தாஸ் முன்னணியில் இருக்க வேண்டும் என்றும், அவர்களின் பணி ஆதரிக்கப்படவும், கூட்டமைப்பு உறுப்பினர்களின் பணி முக்கியத்துவம் பெறவும் உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
உலகம் முழுவதிலுமிருந்து ஏறக்குறைய 400 காரித்தாஸ் பிரதிநிதிகள் பங்கேற்ற அக்கூட்டத்தில் பேசிய பேராயர் கிகுச்சி அவர்கள், திருஅவையின் முக்கியமான பணியை நிறைவேற்றவும் முழு அமைப்பை வழிநடத்தவும் பொதுச் செயலாளருடன் தான் இணைந்து உழைக்க விரும்புவதாகவும், அனைவரும் ஒன்றாக இணைந்து பயணிக்க இதனால் அழைக்கப்படுகிறோம் என்றும் எடுத்துரைத்தார்.
1958-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் நாள் Iwate இல் பிறந்த Tarcisio Isao Kikuchi அவர்கள், 1986-ஆம் ஆண்டு மார்ச் 15-ஆம் நாள் அருள்பணியாளராகத் திருப்பொழிவுபெற்றார். ஆப்ரிக்காவின் கானாவில் 8 ஆண்டுகள் மறைப்பணியாளராகப் பணியாற்றியவர். 2004 முதல் நிகாட்டாவின் ஆயராகவும், அதன்பின் 2017- ஆம் ஆண்டு டோக்கியோவின் பேராயராகவும் பணியாற்றியவர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்