தேடுதல்

“The Letter” ஆவணப்படத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்

காலநிலை மாற்றம் குறித்த, ஐ.நா. மற்றும், பாரிஸ் ஒப்பந்தங்களை, வத்திக்கான் ஏற்பதை திருப்பீடம் முறைப்படி அறிவித்ததைக் குறிக்கும் விதமாக, அக்டோபர் 04, இச்செவ்வாயன்று “The Letter” ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான்

அக்டோபர் 04, இச்செவ்வாயன்று, வத்திக்கானில் திரையிடப்பட்ட காலநிலை மாற்றம், மற்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த “The Letter” அதாவது திருமடல் என்ற ஆவணப்படம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சூழலியல் பாதுகாப்புக்கு மேற்கொண்டுவரும் முயற்சிகளைப் பதிவுசெய்துள்ளது.

ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர், ஒரு பூர்வீகஇனத் தலைவர், காலநிலை மாற்றத்தால் புலம்பெயர்ந்துள்ள ஒருவர், உலகின் கடைஎல்லைகளுக்குப் பயணம் மேற்கொண்டு இறுதியில் வத்திக்கானுக்கு வருகைதந்த கடல் உயிரியல் தம்பதியர் ஆகிய அனைவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் பேசுவது இந்த ஆவணப்படத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

வத்திக்கானின் உலக ஆயர்கள் மாமன்றத்தின் புதிய அறையில் திரையிடப்பட்ட “The Letter” ஆவணப்படத்தை, அக்டோபர் 04, இச்செவ்வாய் முதல் யுடியூப் சமூக ஊடகத்தில் கட்டணமின்றி பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்கும் காணொளிகளோடு தொடங்குகின்ற இந்த ஆவணப்படத்தில், 2013ஆம் ஆண்டு மார்ச் 19ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப்பணியை ஏற்ற நிகழ்வு பற்றி இதுவரை ஒருபோதும் பார்த்திராத படங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த ஆவணப்படத்திற்கு இடப்பட்டுள்ள தலைப்பு, திருத்தந்தையின் சில செய்திகளைக் கொண்ட “encyclical” அதாவது திருமடல் என்ற சொல்லிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது, மற்றும், இந்த தலைப்பு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2015ஆம் ஆண்டில் வெளியிட்ட Laudato si' அதாவது இறைவா உமக்கே புகழ் என்ற திருமடலைக் குறிக்கின்றது.  

காலநிலை மாற்றம் குறித்த, ஐ.நா. மற்றும், பாரிஸ் ஒப்பந்தங்களை வத்திக்கான் ஏற்பதை திருப்பீடம் முறைப்படி அறிவித்ததைக் குறிக்கும் விதமாக, அக்டோபர் 04, இச்செவ்வாயன்று இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்படத் தயாரிப்பில் வத்திக்கான் சமூகத்தொடர்புத் துறையோடு இணைந்து பணியாற்றிய, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவைத் தலைவர் கர்தினால் மைக்கிள் செர்னி அவர்கள், இச்செவ்வாயன்று இந்த படத்தை செய்தியாளர் கூட்டத்தில் அறிமுகப்படுத்தி அது குறித்து விவரித்தார்.

‘The Letter’ ஆவணப்படம், உரையாடலின் முக்கிய கருத்தியலை உயர்த்திக்காட்டுகிறது என்றும், உரையாடல், படைத்தவரோடும், படைப்போடும், மனிதர் மத்தியிலும் மனித சமுதாயம் கொண்டிருக்கும் அமைதி குறித்த திருத்தந்தையின் கண்ணோட்டமாகும் என்றும், கர்தினால் செர்னி அவர்கள் எடுத்துரைத்தார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 October 2022, 14:21