தேடுதல்

பாப்பிறை மறைப்பணி கழகங்களின் தலைவரான பேராயர்  Giampietro Dal Toso பாப்பிறை மறைப்பணி கழகங்களின் தலைவரான பேராயர் Giampietro Dal Toso   (Paul Samasumo)

பாப்பிறை மறைப்பணி கழகங்களின் 200வது ஆண்டு நிறைவு

Pauline-Marie Jaricot (1799-1862) அவர்கள், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்திற்காக பாப்பிறை மறைப்பணி கழகத்தை உருவாக்கினார்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருஅவையின் வாழ்விலும், மறைப்பணியிலும் கத்தோலிக்கப் பொதுநிலையினரின் ஈடுபாடு மிகவும் இன்றியமையாதது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தி வருகிறார் என்று, பாப்பிறை மறைப்பணி கழகங்களின் தலைவரான பேராயர்  Giampietro Dal Toso அவர்கள் கூறியுள்ளார்.

திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், Romanorum Pontificum என்ற தலைப்பில், தன் சொந்த விருப்பத்தினால் வெளியிடும் Motu Proprio அறிக்கை வழியாக, பாப்பிறை மறைப்பணி கழகத்திற்கு அங்கீகாரம் அளித்ததன் நூறாம் ஆண்டு, மே 03, இச்செவ்வாயன்று நிறைவு பெற்றது எனவும், இந்த அங்கீகாரம், உலகளாவியத் திருஅவைக்கு, பாப்பிறை மறைப்பணி கழகத்தின் மறைப்பணி ஆர்வமும், பணியும் முக்கியமானது என உறுதி செய்தது எனவும், பேராயர் Dal Toso அவர்கள் கூறியுள்ளார்.

மறைப்பணியோடு ஒருமைப்பாடு

நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்திற்காக பாப்பிறை மறைப்பணி கழகம் உருவாக்கப்பட்டு, மே 3, இச்செவ்வாய்க்கிழமையோடு 200 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது என்றுரைத்துள்ள பேராயர் Dal Toso அவர்கள், இவ்வேளையில், இறைவேண்டல், நன்கொடைகள், மற்றும், மறைப்பணியில் ஆர்வம் ஆகியவை வழியாக திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவரும் திருஅவையின் மறைப்பணியில் பங்குகொள்ள முடியும் என்று கூறினார்.  

இவ்வாறு பங்குகொள்வதன் வழியாக கிறிஸ்தவர்கள், உலகெங்கும் தங்களின் கிறிஸ்தவ நம்பிக்கையை வாழ முடியும் என்றும், கடந்த 200 ஆண்டுகளாக, ஆப்ரிக்கா, ஆசியா மற்றும், பசிபிக் பகுதி நாடுகளில் மறைப்பணி தொடர்புடைய திட்டங்களுக்கு இக்கழகம் உதவி வருகின்றது என்றும், பேராயர் Dal Toso அவர்கள் கூறியுள்ளார்.

Pauline-Marie Jaricot

1799ம் ஆண்டு முதல் 1862ம் ஆண்டு வரை வாழ்ந்த Pauline-Marie Jaricot என்பவர், திருஅவையின் விசுவாசத்தைப் பரப்பும் பேராயத்திற்காக பாப்பிறை மறைப்பணி கழகத்தை உருவாக்கினார். 2020ம் ஆண்டு மே 26ம் தேதி, வணக்கத்துக்குரிய Pauline-Marie Jaricot அவர்களின் பரிந்துரையால் நடைபெற்ற புதுமைக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்.

Romanorum Pontificum என்ற Motu Proprio அறிக்கை வழியாக, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், பாலர் சபை அமைப்புக்கும், திருத்தூதர் புனித பேதுரு கழகத்திற்கும் அங்கீகாரம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 May 2022, 15:07