சிறுபான்மையினரின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்பட...
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
அனைத்து நாடுகளிலும், சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும், மற்றும், அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்படவேண்டும் என்று, திருப்பீடப் பிரதிநிதியான அருள்பணி யானுஸ் உர்பான்சிஸ்க் அவர்கள், ஐரோப்பிய கூட்டம் ஒன்றில், கேட்டுக்கொண்டார்.
வியன்னா நகரில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும், OSCE எனப்படும், ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும், ஒத்துழைப்பு நிறுவனத்தில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் அருள்பணி உர்பான்சிஸ்க் அவர்கள், அந்நிறுவனத்தின் நிரந்தர அவையின் 1318வது கூட்டத்தில், சூன் 03, இவ்வியாழனன்று உரையாற்றுகையில் இவ்வாறு விண்ணப்பித்தார்.
சிறுபான்மை சமுதாயங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் குறைப்பதற்கு, முதலில் அவர்களுக்கு கல்வி கற்க வாய்ப்புக்களை வழங்குவதன் வழியாக, இளையோர், வேலைவாய்ப்புகளைப் பெறவும், அவர்கள், பல்வேறு கலாச்சாரங்கள், இனக் குழுக்கள், மற்றும், மதங்களை மதிக்கவும், அவற்றை புரிந்துகொள்ளவும் உதவமுடியும் என்று அருள்பணி உர்பான்சிஸ்க் அவர்கள் கூறியுள்ளார்.
இவ்வாறு சிறுபான்மையினர், சமுதாய, மற்றும், அரசியல் வாழ்வில், உயிர்த்துடிப்புடன் பங்கேற்கவும், சகிப்புத்தன்மை மற்றும், பாகுபாடற்ற நிலையில் வளர்ந்து, அமைதி மற்றும், உறுதியான தன்மையின் பாலங்களைக் கட்டியெழுப்பவும், கல்வியால் உதவ முடியும் எனவும், அருள்பணி உர்பான்சிஸ்க் அவர்கள் கூறியுள்ளார்.
இரண்டாவதாக, ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே சம உரிமைகளுக்கு உறுதி வழங்கப்படுவதன் வழியாக, அரசியல், பொருளாதார, சமூக, மற்றும், கலாச்சார வாழ்வில், பெண்கள், உயிரோட்டத்துடன் பங்கேற்கவும், சம வாயப்புக்களைப் பெறவும் இயலும் என்றும், அருள்பணி உர்பான்சிஸ்க் அவர்கள் எடுத்துரைத்துள்ளார்.
மூன்றாவதாக, மொழி அடிப்படையிலான பாகுபாடுகள் களையப்படுவது, நாடுகளில் சிறுபான்மை சமுதாயங்கள் மேம்படுத்தப்பட உதவும் எனவும், திருப்பீட அதிகாரி OSCE நிறுவனத்தின் கூட்டத்தில் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்