உலகளாவிய உடன்பிறந்த உணர்வுக்கு திருப்பீடம் அழைப்பு
மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்
வன்முறை புறக்கணிக்கப்பட்டு, மனிதர் மதிக்கப்படும் ஓர் உலகில், நட்புறவு பாலங்களைக் கட்டியெழுப்புதல் மற்றும், உரையாடல் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதன் வழியாக, மனித உடன்பிறந்த உணர்வையும், நல்லிணக்க வாழ்வையும் வளர்க்குமாறு, உலகளாவிய முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும், திருப்பீட பல்சமய உரையாடல் அவை அழைப்பு விடுத்துள்ளது.
Id al-Fitr விழாவில் நிறைவடையும் இரமதான் நோன்பு மாதத்திற்கென, மே 10, இவ்வெள்ளியன்று உலகளாவிய முஸ்லிம்களுக்கு வாழ்த்து தெரிவித்து, செய்தி வெளியிட்டுள்ள திருப்பீட பல்சமய உரையாடல் அவை, இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது.
நோன்பு, செபம் மற்றும் தர்மக் காரியங்களுக்கு அர்ப்பணிக்கும் இரமதான் மாதம், முஸ்லிம்-கிறிஸ்தவ நட்பின் ஆன்மீக பிணைப்பையும் வலுப்படுத்தும் காலமாக அமைந்துள்ளது என்றுரைக்கும் அச்செய்தி, நம் பொதுவான நன்மைக்காகப் பாலங்களைக் கட்டியெழுப்புவோம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாண்டு பிப்ரவரி 4ம் தேதி அபு தாபியில், திருத்தந்தையும், இஸ்லாம் பெரிய குரு Sheikh Ahmed el-Tayeb அவர்களும், இணைந்து கையெழுத்திட்ட அறிக்கையிலிருந்தும் அச்செய்தியில் மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளது.
அமைதியின் விழுமியங்களில் வேரூன்றியவர்களாய், ஒருவரையொருவர் புரிந்துகொள்ளல், மனித உடன்பிறந்த உணர்வு, நல்லிணக்க வாழ்வு, ஞானம், நீதி மற்றும் அன்பை மீண்டும் உயிர்பெறச் செய்தல் ஆகிய விழுமியங்களைப் பாதுகாப்பவர்களாய், இவ்விரு மதத்தவரும் வாழ்வதற்கு, இந்த அறிக்கை அழைப்பு விடுத்தது.
“கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும்: உலகளாவிய உடன்பிறந்த உணர்வை ஊக்குவித்தல்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இச்செய்தியில், திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் செயலர் ஆயர் Miguel Ángel Ayuso Guixot அவர்கள் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்