தேடுதல்

திருத்தந்தையின் ஆசிய பயணத்திற்கான இலச்சினை விருதுவாக்கு திருத்தந்தையின் ஆசிய பயணத்திற்கான இலச்சினை விருதுவாக்கு  

திருத்தந்தையின் ஆசிய பயணத்திற்கான இலச்சினை, விருதுவாக்கு வெளியீடு

ஆசிய நாடுகளுக்கான திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் வரும் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது : திருப்பீடச் செய்தித் தொடர்பகம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வரவிருக்கும் திருத்தந்தையின் ஆசிய திருத்தூதுப் பயணத்திற்கான அதிகாரப்பூர்வ இலச்சினைகள் மற்றும் விருதுவாக்குகளை வெளியிட்டுள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.

ஆசிய கண்டத்தில் இந்தோனேசியா, பாப்புவா நியூ கினி, கிழக்கு திமோர் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கானத் திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் வரும் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும் அதன் செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.

இந்தோனேசியா

இந்தோனேசிய திருத்தூதுப் பயணம்
இந்தோனேசிய திருத்தூதுப் பயணம்

செப்டம்பர் 3 -ஆம் தேதி இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிற்குச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 6-ஆம் தேதி வரை அங்குத் தங்குகிறார்.

இந்தத் திருத்தூதுப் பயணத்திற்கான இலச்சினையில் ஒரு புனித கழுகு முன் நின்று, திருத்தந்தை தனது கரத்தை உயர்த்தி ஆசீர்வதிக்கிறார். இது பாரம்பரிய இந்தோனேசிய பற்றிக் (batik) வேலைப்பாடுகளால் நெய்யப்பட்ட துணியை நினைவூட்டும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

மேலும் Inlaid என்பது இந்தோனேசியாவின் வரைபடமாகும். இது பல்வேறு இன மற்றும் சமூகக் குழுக்கள், மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் மத நம்பிக்கைகளால் வகைப்படுத்தப்படும் ஒரு தீவுக்கூட்டமாகும்.

நம்பிக்கை, உடன்பிறந்த உறவு மற்றும் இரக்கம் என்பது திருத்தந்தையின் இந்நாட்டிற்கான திருத்தூதுப் பயணத்தின் விருதுவாக்காகும்.

பாப்புவா நியூ கினியா

பாப்புவா நியூ கினியா திருத்தூதுப் பயணம்
பாப்புவா நியூ கினியா திருத்தூதுப் பயணம்

அடுத்து, பாப்புவா நியூ கினியாவுக்குச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி வரை தங்கியிருப்பார்.

சூரிய உதயம் மற்றும் மறைவைத் தூண்டும் வண்ணங்களில் சித்தரிக்கப்பட்டுள்ள சிலுவை பாப்புவா நியூ கினியாவிற்கான இலட்சினையாக அமைகிறது.

சிலுவையில், பாப்புவா நியூ கினியாவைக் குறிக்கும் விண்ணகப் பறவையைக் காணலாம். மேலும் 'செபியுங்கள்' என்பது இந்நாட்டிற்கான திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்தின் விருதுவாக்காக அமைகிறது. இது சீடர்கள் இயேசுவிடம், "ஆண்டவரே, செபிக்க  எங்களுக்குக் கற்றுக்கொடும்" (லூக் 11:1) என்று கேட்டதன் அகத்தூண்டுதலாக அமைகிறது.

கிழக்குத் திமோர்

கிழக்குத் திமோர் திருத்தூதுப் பயணம்
கிழக்குத் திமோர் திருத்தூதுப் பயணம்

பின்னர், பாப்புவா நியூ கினியாவிலிருந்து, கிழக்குத் திமோருக்குச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி வரை அங்குத் தங்கியிருப்பார்.

இந்நாட்டிற்கான திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்தின் இலச்சினையில், திருத்தந்தை தனது கரத்தை உயர்த்தி ஆசீர்வதிப்பதைப் பார்க்கின்றோம். அவருக்குப் பின்னால் பூகோளம் உள்ளது, அதிலிருந்து கிழக்குத் திமோரின் வரைபடம் வெளிப்படுகிறது.

மேலே, ஒரு வளைவில் எழுதப்பட்ட, "உங்கள் நம்பிக்கை உங்கள் கலாச்சாரமாக இருக்கட்டும்" என்பது திருத்தந்தையின் திருப்பயணத்திற்கான விருதுவாக்காக அமைந்துள்ளது. இது கிழக்குத் திமோர் மக்கள் தங்கள் கலாச்சாரம் மற்றும் மரபுகளுக்கு ஏற்ப தங்கள் நம்பிக்கையை வாழ அறிவுறுத்துகிறது.

சிங்கப்பூர்

சிங்கப்பூர் திருத்தூதுப் பயணம்
சிங்கப்பூர் திருத்தூதுப் பயணம்

தனது திருப்பயணத்தின் இறுதிக்கட்டமாக சிங்கப்பூர் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் மாதம் 11 முதல் 13 வரை அங்குத் தங்குகிறார்.

இந்நாட்டிற்கான திருத்தந்தையின் திருத்தூதுப் பயண இலச்சினை மூன்று அரசர்களை வழிநடத்திய விண்மீன், நற்கருணை மற்றும் சிங்கப்பூர் கொடியின் ஐந்து விண்மீன்களால் ஈர்க்கப்பட்ட பகட்டான சிலுவையை சித்தரிக்கிறது. சிலுவையின் இருபுறமும் திருத்தூதுப் பயணத்தின் விருதுவாக்கான "ஒற்றுமை-நம்பிக்கை." என்பது பொறிக்கப்பட்டுள்ளது.

'ஒற்றுமை' என்பது திருஅவையிலும் சமூகம் மற்றும் குடும்ப உறவுகளின் பின்னணியிலும் விசுவாசிகளிடையே இருக்க வேண்டிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வெளிப்படுத்துகிறது.

'நம்பிக்கை' என்பது இப்பகுதியில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு, குறிப்பாக, பாகுபாடு மற்றும் துன்புறுத்தலை அனுபவிப்பவர்களுக்கு, திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருக்கும் எனக் குறிப்பிடுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 May 2024, 15:08