தேடுதல்

பிளாரன்சிஸ் விபத்து ஏற்பட்ட பகுதி பிளாரன்சிஸ் விபத்து ஏற்பட்ட பகுதி  (ANSA)

பிளாரன்ஸ் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இரங்கல் தந்திச்செய்தி

இத்தாலியின் பிளாரன்ஸ் நகரில் உள்ள வணிகச்சந்தைக் கட்டுமானத்தளத்தில் ஏற்பட்ட கொடிய விபத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மரணமடைந்தவர்களுக்காக தன் இரங்கல் தந்திச்செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

பிப்ரவரி 16 வெள்ளிக்கிழமை காலை இத்தாலியின் பிளாரன்ஸ் நகரில் உள்ள வணிகச்சந்தை கட்டுமானத்தளத்தில் ஏற்பட்ட கொடிய விபத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மரணமடைந்தவர்களுக்காக செபிப்பதாகவும், அவர்களுடன் தனது ஆன்மிக நெருக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் இரங்கல் தந்திச்செய்தி ஒன்றினை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 17 சனிக்கிழமை திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் கையொப்பமிடப்பட்ட இரங்கல் தந்திச் செய்தியானது திருத்தந்தையின் சார்பில், பிளாரன்ஸ் பெருநகர உயர்மறைமாவட்ட பேராயரான கர்தினால் GIUSEPPE BETORI அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வணிகச் சந்தையின் நான்காம் தளத்தில் ஏற்பட்ட விபத்தினால் மரணம் மற்றும் காயங்களை ஏற்பட்டுள்ளது குறித்து தனது ஆழ்ந்த இரங்கல்களை வெளிப்படுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பணியிடத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான வேண்டுகோளையும் இதன் வழியாக வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பணியிடப்பாதுகாப்பிற்கான உறுதியான அர்ப்பணிப்பைப் பொறுப்பில் இருப்பவர்கள் கொடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மீட்புப்பணிகள் மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபடுவோர் அனைவருக்கும் தனது செபம் மற்றும் ஆன்மிக நெருக்கத்தை வெளிப்படுத்துவதாக எடுத்துரைத்து தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும்  எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

    

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 February 2024, 14:44