தேடுதல்

வியாகுல அன்னை வியாகுல அன்னை 

கருணையுள்ள வாழ்வை அடையாளப்படுத்தும் மரியா

மரணத்தைக் கொண்டு வந்த பழைய ஏவாளுக்குப் பதிலாக, வாழ்வைக் கொண்டு வரும் புதிய ஏவாளைப் போல ஒளி வீசுகின்றார் மரியா

மெரினா ராஜ் – வத்திக்கான்

மகனின் அருகில் உண்மையான நம்பிக்கையுடன்  நிற்கும் அன்னை மரியா, தனிமையின் உருவம், பாடுகளின் தோழமை, மற்றும் பழமையின் நிறைவில் புதிய ஆவணங்களைத் தரும் கருணையுள்ள வாழ்வை அடையாளப்படுத்துகின்றார் என்று குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 9 சனிக்கிழமை போர்த்துக்கல் நாட்டுக் கர்தினால் ஜோசப் டொலந்தினோ அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்  நற்கருணைக் கொண்டாட்டத்தில் பங்கேற்க இருக்கும் அன்னை மரியாவின் பக்தர்களான போர்த்துக்கல் நாட்டு மக்களைத் தன் சார்பாக வாழ்த்துமாறும் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

செப்டம்பர் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை போர்த்துக்கலின் மாஃப்ரா திருத்தலத்தில் நடைபெற உள்ள ஐரோப்பிய சகோதரத்துவம் மற்றும் உடன்சகோதரத்துவ மன்றத்தின் 4ஆவது ஆண்டு நிறைவுவிழா திருப்பலி மற்றும் தூய வியாகுல அன்னைக்கு முடிசூட்டு விழாவிற்கு அனுப்பியுள்ள கடிதமானது கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கான திருப்பீட அவையின் தலைவரான போர்த்துக்கல் நாட்டுக் கர்தினால் ஜோசப் டோலண்தினோ அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மரணத்தைக் கொண்டு வந்த பழைய ஏவாளுக்குப் பதிலாக, வாழ்வைக் கொண்டு வரும் புதிய ஏவாளைப் போல மரியா ஒளி வீசுகின்றார் எனக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்பிக்கையுள்ள மக்கள் ஒன்று கூடும்போது நல்ல மனிதர்களின் பிரசன்னத்தையும், வாழ்வின்  நல் திருப்பங்களையும் அனுபவிக்க முடியும் என்றும் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நற்கருணைக் கொண்டாட்டத்திற்கு தலைமை ஏற்க இருக்கும் கர்தினால் டோலன்தினோ அவர்கள், திருத்தந்தையின் சார்பாக நாட்டின் அதிகாரிகள், தலைவர்கள்,  நம்பிக்கையுள்ள மக்கள் அனைவரையும் வாழ்த்தும்படியாகவும் அக்கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திருப்பலியில் பங்கேற்க இருக்கும் அனைவருக்கும் தனது சிறப்பான ஆசீரையும் செபத்தையும் அனுப்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Rio Grande do Sul 

மேலும் இதே நாளில் திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கையொப்பமிட்ட திருத்தந்தையின் இரங்கல் தந்திச் செய்தியானது Rio Grande do Sul பகுதியில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக  தெற்குப்பகுதி புனித மரியா உயர் மறைமாவட்ட ஆயரான பேராயர் DOM LEOMAR BRUSTOLIN  அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 September 2023, 12:51