தேடுதல்

ஜெமெல்லி மருத்துவமனைப் பணியாளர்கள் செபத்தில் ஜெமெல்லி மருத்துவமனைப் பணியாளர்கள் செபத்தில்   (REMO CASILLI)

திருத்தந்தையின் உடல்நிலை நன்றாகத் தேறி வருகிறது

தனக்கு உதவும் மருத்துவர்கள், தாதியர், ஏனையப் பணியாளர்கள், மற்றும் காவல்துறையினருடன் இணைந்து மதிய உணவை உண்ட திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

குடலிறக்க அறுவை சிகிச்சைச் செய்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல்நிலை நன்றாகத் தேறி வருவதாகவும், திங்கள்கிழமை காலையில் திருநற்கருணைப் பெற்ற அவர், தன் அலுவலகப் பணிகளை மருத்துமனை அறையிலிருந்தே கவனித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமையன்று அவர் நண்பகல் மூவேளை செபத்தை தனியாகச் செபித்தபின், தனக்கு உதவும் மருத்துவக் குழுவுடன் மதிய உணவருந்தியதாக திருப்பீடத் தகவல் தொடர்பு அலுவலகம் மேலும் தெரிவித்தது.

அவருக்கு காய்ச்சல் எதுவும் வரவில்லை எனவும், அவரின் இதயத்துடிப்பும் இரத்த அழுத்தமும் சீராக இருப்பதாகவும் மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.

மூச்சு தொடர்பாக அவர் சில பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், ஓரளவு நடக்கத் துவங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு காலையில் தொலைக்கட்சி வழி திருப்பலியில் கலந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருநற்கருணையைப் பெற்றதாகவும், அதன்பின் தன் அறையிலுள்ள சிறு கோவிலுக்குச் சென்று நண்பகல் மூவேளை செபஉரையைச் செபித்ததாகவும், மருத்துவக் குழுவின் அறிக்கையை மேற்கோள்காட்டி திருப்பீட தகவல் தொடர்புத் துறை தெரிவித்தது.

ஞாயிறு நண்பகல் மதிய உணவை திருத்தந்நை பிரான்சிஸ் அவர்கள், தனக்கு உதவி வரும் மருத்துவர்கள், தாதியர், ஏனையப் பணியாளர்கள், மற்றும் தனக்கு பாதுகாப்பு வழங்கும் காவல்துறையினர் ஆகியோரோடு இணைந்து உண்டு மகிழ்ந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 June 2023, 15:08