தேடுதல்

பொது நிலையினர், குடும்பம், மற்றும் வாழ்விற்கான திருப்பீடத்துறையினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் பொது நிலையினர், குடும்பம், மற்றும் வாழ்விற்கான திருப்பீடத்துறையினருடன் திருத்தந்தை பிரான்சிஸ்   (Vatican Media)

பணிவாழ்வின் வேர்களைக் கொண்டது திருமுழுக்கு

பேராயங்கள், சேவைகள், பணிகள், அலுவலகங்கள் ஆகிய அனைத்தும் ஒருபோதும் தனிப்பட்ட நபரை அடையாளப்படுத்தும் சுய குறிப்புகளாக மாறக்கூடாது

மெரினா ராஜ் - வத்திக்கான்

திருமுழுக்கு மற்றும் தூய ஆவியின் வரங்கள் பணிவாழ்வின் வேர்களைக் கொண்டுள்ளன என்றும், கிறிஸ்துவை நம்புபவர்கள் அவரது சீடராக ஏற்றுக் கொள்ளப்பட்டு, சமூகத்திற்கான பயனுள்ள பணியினை ஆற்றுகின்றார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 22 சனிக்கிழமை வத்திக்கானின்  கிளமெந்தினா அறையில் பொது நிலையினர், குடும்பம், மற்றும் வாழ்விற்கான திருப்பீடத்துறையின் நிறையமர்வுக் கூட்டத்தின் பங்கேற்பாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

‘ஒன்றிணைந்து பயணிக்கும் திருஅவையில், பொது நிலையினர் மற்றும் பணி‘ என்ற என்ற கருப்பொருளில் நடைபெறும் இக்கூட்டத்திற்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொது நிலையினரின் பணி என்பது பேராயங்களின் சட்டங்கள் அடிப்படையில் அல்ல, மாறாக, திருமுழுக்கின் அடிப்படையில் சீடர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டதனால், செய்யப்படுவது என்றும் எடுத்துரைத்தார்.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள்
கூட்டத்தில் பங்கேற்றவர்கள்

தூய ஆவியின் வரங்கள் நம்பிக்கையுள்ள பொது நிலையினர் வழியாக, சமூகத்திற்கான ஒரு பயனுள்ள பணியாக அங்கீகரிக்கப்படுகின்றது என்றும், குறிப்பிட்ட பேராயத்தின் வழியாக அப்பணி அறிமுகப்படுத்தப்பட்டு உலகமெங்கும் பரவுகின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பேராயங்கள், சேவைகள், பணிகள், அலுவலகங்கள் ஆகிய அனைத்தும் ஒருபோதும் தனிப்பட்ட நபரை அடையாளப்படுத்தும் சுய குறிப்புகளாக மாறக்கூடாது என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய சமூக, அரசியல் மற்றும் பொருளாதார உலகில் கிறிஸ்தவ விழுமியங்களைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பொது நிலையினருக்கு ஒப்படைக்கப்பட்ட இப்பணியினை, சமூகத்தின் மாற்றத்திற்கு நற்செய்தியைப் பயன்படுத்துவதில் உண்மையான அர்ப்பணிப்பு இல்லாமல் திருஅவைக்கு ஆற்ற முடியாது என்றும், மறைப்பணி, மக்கள் பணி ஆகிய இரண்டும் மிக முக்கியமானதாக கருதப்பட வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கூட்டத்தினர் மத்தியில் திருத்தந்தை பிரான்சிஸ்
கூட்டத்தினர் மத்தியில் திருத்தந்தை பிரான்சிஸ்

மறைப்பணி மற்றும் மக்கள் பணி

மற்றவர்களுக்குப் பணி செய்யும் அனைத்து பேராயங்களும் திருஅவையின் ஒரே பணியின் வெளிப்பாடுகள் என்றும், பணியாளர்கள் அனைவரும் தங்களைத் தாழ்த்தி மக்கள் பணி செய்ய அர்ப்பணிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும் என்ற (மாற்கு 10:43-44) இறைவார்த்தைக்கேற்ப, நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும், தங்களையே தாழ்த்தி திருஅவைப் பணிகளை ஆற்றவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

கிறிஸ்துவுக்கும் பணியாற்ற விரும்பும் ஒவ்வொருவரும் திருமுழுக்கின் வழியாகவே தனது சொந்த வாழ்க்கையின் அர்த்தத்தைக் கண்டறிய முடியும் என்றும், ஆசீர்வதிக்கவும், உயிர்ப்பிக்கவும், விடுவிக்கவும், குணப்படுத்தவும், இந்தப் பூமியில் அவர் ஆற்றும் பணியினால் மகிழ்ச்சியின் ஒளியாக விளங்குவார்கள் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 April 2023, 13:06