தேடுதல்

செபம் மற்றும் அன்பு என்னும் ஆயுதங்களை ஏந்துவோம்: திருத்தந்தை

மனத்தாழ்மையுடன் நாம் கடவுளால் உருவாக்கப்படுவதற்கு நம்மையே அனுமதிப்பதன் வழியாக, நமது பணியில் புதுப்பித்தலை அனுபவிக்கின்றோம்: திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பிப்ரவரி 4, இச்சனியன்று, தென்சூடானின் தலைநகர் ஜூபாவிலுள்ள புனித தெரேசா பேராலயத்தில் ஆயர்கள், அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், துறவியர் மற்றும் அருள்பணித்துவ மாணவர்களுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரை.

ஆயர்களே, அருள்பணியாளர்களே, திருத்தொண்டர்களே, துறவியரே, மற்றும், அருள்பணித்துவ மாணவர்களே, உங்களைச் சந்திப்பதற்காக நான் நீண்ட காலமாக ஆவலுடன் காத்திருக்கிறேன், இந்தச் சந்தர்ப்பத்திற்காக நான் இறைவனுக்கு நன்றி கூற விரும்புகிறேன். நேற்றைய எனது உரையில் நைல்நதி பற்றி கூறினேன். இன்று அதன் தொடர்ச்சியாக என் சிந்தனைகளை உங்களோடுப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புது பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார் (தீத் 3:5) என்ற இறைவார்த்தைகளின் அடிப்படையில், நைல்நதியின் இன்னொரு பரிமாணத்தைப் பார்ப்போம். இது திருமுழுக்கின் அடையாளமாக அமைகிறது. நைல் நதி மோசேயின் கதையை நமக்கு நினைவுபடுத்துகிறது. மேலும் விடுதலை மற்றும் மீட்பைப் பற்றியும் அது பேசுகின்றது.

மோசேயின் வாழ்வை நினைவில் கொண்டவர்களாய், இந்தத் தேசத்து மக்களுக்கு நாம் எவ்வாறு பணியாற்ற முடியும் என்பது குறித்துச் சிந்திப்போம். இந்தக் கேள்விக்கு விடையளிக்கும் விதமாக மோசேயின் இரண்டு பண்புகள் குறித்த கண்ணோட்டங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன். 

மோசேயின் மனத்தாழ்மை

முதலாவதாக, மோசேயின் மனத்தாழ்மையும், கடவுளின் முயற்சிக்கு அவர் அளிக்கும் பணிவான பதிலுமே நம்மை வெகுவாக ஈர்க்கின்றன. முதலில் அவர் தன்னை மையமாக வைத்து, தனது பலத்தை மட்டுமே நம்பி செயல்பட்டார். அதன் காரணமாக அவர் தோல்வியைத் தழுவினார். பின்னர் எரியும் முட்புதரின் வழியே கடவுளுடன் உரையாடியபோது அவரது வாழ்வு முற்றிலும் மாறியது. அதாவது கடவுளின் தனிப்பெரும் வியக்கத்தக்க உதவியுடன் அவர் பார்வோனின் அடிமைத்தளையிலிருந்து இஸ்ரயேல் மீட்டுக்கொண்டு வந்தார்.

ஆம் அன்பர்களே, நாமும் மோசேயைப் போன்று நம்மை மட்டுமே மையப்படுத்தி செயல்படுகிறோம். நமது சொந்த திறமைகளையும் திறன்களையும் மட்டுமே பயன்படுத்தி பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முடியும் என்று நினைக்கின்றோம் அல்லது ஒரு திருஅவையாக, பணம், புத்திசாலித்தனம் அல்லது அதிகாரம் போன்ற மனித வளங்கள் வழியாக மக்களின் துன்பங்களுக்கும் தேவைகளுக்கும் விடை காண முடியும் என்று நாம் கருதுகின்றோம். ஆனால், நாம் நிறைவேற்றும் அனைத்து செயல்களும் கடவுளிடமிருந்தே வருகின்றன. அவர் நம் இறைவன், நாம் அவருடைய கரங்களில் பணிவான கருவிகளாக இருக்க அழைக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்துகொள்வோம்.

“ஏன் முட்புதர் தீய்ந்துபோகவில்லை? இந்த மாபெரும் காட்சியைப் பார்ப்பதற்காக நான் அப்பக்கமாகச் செல்வேன்” என்று கூறி அவரை மனத்தாழ்மையுடன் அணுகிச் செல்கின்றார் மோசே. முட்புதரிலிருந்து கடவுள் மோசேயை அழைத்தபோது, 'இதோ நான்' என்று பதில்மொழி தருகின்றார். மேலும் “இங்கே அணுகி வராதே; உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு; ஏனெனில், நீ நின்று கொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்” என்று கடவுள் கூறியபோது, தனது மிதியடிகளை அகற்றிவிட்டு பணிவுடன் அவரது வார்த்தைக்குச் செவிமடுக்கின்றார் (காண்க விப 3:3-5) இங்குதான் மோசேயின் மனத்தாழ்மை வெளிப்படுவதைக் காண்கின்றோம்.

இதுவே நமது பணிவாழ்வில் நமக்கு இருக்கவேண்டிய மனத்தாழ்மை. மோசேயைப் போன்று வியப்புடனும் பணிவுடனும் கடவுளை அணுகுவதற்கும், அவரிடம் ஈர்க்கப்படுவதற்கும், அவரால் வழிநடத்தப்படுவதற்கும், அவரே நமது வாழ்வின் மையம்  என்பதை உணர்ந்து கொள்வதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். மனத்தாழ்மையுடன் நாம் கடவுளால் உருவாக்கப்படுவதற்கு நம்மையே அனுமதிப்பதன் வழியாக நமது பணியில் புதுப்பித்தலை அனுபவிக்கின்றோம் என்பதை அறிந்துகொள்வோம்.

மோசேயின் பரிந்துரைத்தல்

இரண்டாவதாக, மோசேயின் வாழ்வில் அவர் பல நேரங்களில் தன் நிலையிலிருந்து கீழிறங்கி வந்து மக்களுக்கிடையே நின்று அவர்களுக்காக கடவுளிடம் பரிந்து பேசினார். பரிந்து பேசுவதென்றால், கீழே இறங்கி வந்து, நம் மக்கள் மத்தியில் நம்மை நிறுத்தி, அவர்களைக் கடவுளோடு இணைக்கும் பாலமாகச் செயல்படுவது என்பது அர்த்தமாகும்.

கையில் கோலுடன் மோசே

மோசேயின் பரிந்துரைத்தலை, கையில் கோலுடன் மோசே, கைகளை நீட்டிய நிலையில் மோசே, விண்ணை நோக்கி உயர்த்திய கரங்களுடன் மோசே என்ற மூன்று உருவங்களை மனதில் கொண்டு நமது சிந்தனைகளைத் தொடர்வோம். முதலாவதாக, கையில் கோலுடன் மோசே என்ற உருவமானது, அவர் இரைவாக்கினருக்குரிய முறையில் பரிந்து பேசுகின்றார் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

தான் கையில் கொண்டுள்ள கோலின் வழியாக, அவர் அதிசயங்களைச் செய்கிறார், கடவுளின் உடனிருப்பு மற்றும் வல்லமையின் அடையாளங்களால் அவர் கடவுளின் பெயரில் பேசுகிறார், மக்கள் அனுபவிக்கும் அடக்குமுறைகளைக் கண்டித்து அவர்களை அங்கிருந்து வெளியேற அனுமதிக்குமாறு பார்வோனிடம் முறையிடுகிறார்.

சகோதரர் சகோதரிகளே, அவ்வாறே, மோதல்களுக்கு மத்தியில் வன்முறையை அடக்கி ஒடுக்கவும், வன்முறையைப் பயன்படுத்தும் அநீதி மற்றும் அதிகார முறைகேடுகளுக்கு எதிராகக் குரல் எழுப்பவும், நமது மக்களுக்காகப் பரிந்து பேசவும் நாமும் அழைக்கப்பட்டுள்ளோம். நாம் உண்மையிலேயே பரிந்து பேசும் பணியாளர்களாக இருக்க விரும்பினால், அநீதி மற்றும் வன்முறைச் செயல்களால் ஏற்படும் வலிகளுக்கு முன் நடுநிலை வகிக்க முடியாது.

கைகளை நீட்டிய நிலையில் மோசே

‘மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே’ (விப 14:21) என்று விவிலியம் கூறுகிறது. அவரது நீட்டிய கைகள் கடவுள் தனது வலிமையைக் காட்டப் போகிறார் என்பதற்கு அடையாளமாக அமைகிறது. மேலும்,  ‘மோசே சீனாய் மலையிலிருந்து இறங்கிச் செல்கையில், உடன்படிக்கைப் பலகைகள் இரண்டையும் தம் கைகளில் தாங்கிக் கொண்டிருந்தார்’ (விப 34:29) என்கிறது விவிலியம். மோசேயின் உயர்த்தப்பட்ட கைகள் கடவுளின் நெருக்கத்தையும், அவர் தனது மக்களுடன் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறார் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

தீமையிலிருந்து விடுபட இறைவாக்குரைத்தல் மட்டும் போதுமானதாக இருக்க முடியாது, மாறாக, நமது சகோதரர் சகோதரிகளுக்கு நம் கரங்களை நீட்டி, அவர்களின் பயணத்தில் அவர்களை ஆதரிக்க வேண்டியது அவசியம் என்பதையும், மோசே இஸ்ரயேல் மக்களுக்குச் சரியான வழியைக் காட்டியது மட்டுமன்றி, அவர்களை ஊக்குவித்து விடாமுயற்சியுடன் அவர்கள் அப்பாதையில் பயணம் மேற்கொள்ளவும் உதவினார் என்பதையும் உணர்ந்துகொள்வோம்.

விண்ணகம் நோக்கி உயர்த்திய கரங்களுடன் மோசே

இஸ்ரயேல் மக்கள் தங்களுக்கென ஒரு கன்றுக் குட்டியை வார்த்துக் கொண்டு. அதற்கு வழிபாடு செய்து, பலியிட்டு, ‘இஸ்ரயேலே, எகிப்து நாட்டினின்று உன்னை நடத்தி வந்த தெய்வங்கள் இவையே’ (காண்க விப 32:8) என்று கூறிக்கொண்டு பெரும்பாவத்தில் வீழ்ந்தபோது, மோசே மலையேறிச் சென்று விண்ணை நோக்கி தனது கரங்களை விரித்து செபித்தார் (வசனம் 31-32) .

மக்களின் போராட்டங்களை செபத்தில் கடவுள் முன் கொண்டு வருவது, அவர்களுக்காகப் பரிந்துரைத்து மன்னிப்பு பெறுவது, ஒப்புரவை கடவுளின் இரக்கத்தின் வாய்க்கால்களாக நிர்வகிப்பது ஆகியவை பரிந்துரையாளர்களாக நமது முக்கியப் பணி என்பதை உணர்வோம். இந்த இறைவாக்குரைத்தல் நிலை நம் உயிரையே இழக்கும் சூழலையும் உருவாக்கலாம்.

அன்பான சகோதரர் சகோதரிகளே, நீங்கள் எப்போதும் சிறந்தப் படிப்பினையாளர்களாகவும் சான்று பகர்பவர்களாகவும், செபம் மற்றும் அன்பு என்னும் ஆயுதங்களை ஏந்தியவர்களாகவும் இருக்கவேண்டுமென நான் இறைவேண்டல் செய்கின்றேன். இறைவனின் அன்னை புனித கன்னி மரியா உங்களைப் பாதுகாப்பராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 February 2023, 13:45