கடவுள் இவ்வுலகிற்கு வருவதற்கு அவரே தயாரித்த “வழி” கன்னி மரியா
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
கடவுள் இவ்வுலகிற்கு வருவதற்கு அவரே தயாரித்த “வழி” கன்னி மரியா என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் டிசம்பர் 08, இவ்வியாழனன்று கூறியுள்ளார்.
தூய கன்னி மரியாவின் அமலப் பிறப்பு பெருவிழாவான டிசம்பர் 08 இவ்வியாழனன்று தன் டுவிட்டர் பக்கத்தில் ஒன்றிணைந்து செபிப்போம் (#PrayTogether) என்ற ஹாஷ்டாக்குடன் எழுதியுள்ள குறுஞ்செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, இக்காலத்தில் அனைத்து மனிதரும் ஆவலோடு காத்திருக்கின்ற மீட்பு மற்றும் அமைதிக்காக அவ்வன்னையின் பரிந்துரையை மன்றாடுவோம் என்றும் கூறியுள்ளார்.
அமல அன்னை பெருவிழா
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கீழைத் திருஅவையில் ‘மரியாவின் பிறப்பு’ என்றதொரு விழா கொண்டாடப்பட்டு வந்தது. இவ்விழா மரியாவின் பிறப்பையும், அவரிடம் விளங்கிய நல்ல பண்புகளையும் பறைசாற்றுதாய் இருந்தது. படிப்படியாக இவ்விழா இலத்தீன் வழிபாட்டுமுறை திருஅவைக்கும் பரவியது.
12ம் நூற்றாண்டில் கொண்டாடப்பட்ட இப்பெருவிழா, மரியாவின் களங்கமற்ற தன்மையையும், தூய்மையையும் பறைசாற்றுவதாய் இருந்தது. அப்போதுதான் திருஅவைத் தந்தையர்களிடையே மரியாவின் மாசற்ற தன்மையைப் பற்றிய விவாதம் எழுந்தது. இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தாற்போல் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புனித John Duns Scotus என்பவரின் வார்த்தைகள் அமைந்தன.
“கன்னி மரியா கருவிலே பாவமாசின்றிப் பிறக்கக் காரணம், அவர் இயேசுவைப் பெற்றெடுப்பதற்காக. ஆதலால் மரியாவின் அமலோற்பவம் இயேசுவின் பிறப்பை முன்னிட்டு, கடவுள் மரியாவுக்குக் கொடுத்த மிகப் பெரிய கொடை எனச் சொல்லலாம்” என்றார் அவர். அதன்பிறகு மரியாவைப் பற்றிய இத்தகைய சிந்தனை திருஅவை எங்கும் பரவியது.
பாப்பிறை உலகலாவிய மரியா கழகத்தின் செயலராக...
மேலும், பாப்பிறை உலகலாவிய மரியா கழகத்தின் செயலராக, பிரான்சிஸ்கன் சபையின் அருள்பணி Marco Antonio Mendoza Martínez அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் டிசம்பர் 08, இவ்வியாழனன்று நியமித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்