தேடுதல்

திருத்தந்தை 1,300 ஏழைகளோடு மதிய உணவு 131122 திருத்தந்தை 1,300 ஏழைகளோடு மதிய உணவு 131122 

திருத்தந்தை 1,300 ஏழைகளோடு மதிய உணவு

இத்தாலிய காரித்தாஸ் அமைப்பின் கணிப்புப்படி, 14 இலட்சம் சிறார் உட்பட, இத்தாலியில் 56 இலட்சம் பேர் வறுமையில் வாழ்கின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

இஞ்ஞாயிறு காலையில் வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் ஆறாவது வறியோர் உலக நாள் திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கில் ஏறத்தாழ 1,300 ஏழைகளோடு மதிய உணவருந்தினார்.

உரோம் காரித்தாஸ் அமைப்பு, சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பு ஆகியவற்றின் உதவிபெறும் ஏறத்தாழ 1,300 ஏழைகள் திருத்தந்தையோடு சேர்ந்து மதிய உணவருந்தினர். இத்தாலிய Amico Società di Navigazione என்ற நிறுவனம் இவ்வுணவை வழங்கியுள்ளது. இத்தாலிய காரித்தாஸ் அமைப்பின் கணிப்புப்படி, 14 இலட்சம் சிறார் உட்பட, இத்தாலியில் 56 இலட்சம் பேர் வறுமையில் வாழ்கின்றனர்.

COP27 Laudato Si’ செயல்திட்ட ஆண்டு நிறைவை நினைவுகூர்கின்றது

எகிப்தில் நடைபெற்றுவரும், COP27 எனப்படும் காலநிலை மாற்றம் குறித்த 27வது உச்சி மாநாடு, Laudato Si’ திருமடலின் செயல்திட்டம் தொடங்கப்பட்டதன் முதலாமாண்டை நினைவுகூர்கின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று கூறியுள்ளார்.

COP27 உச்சி மாநாடு
COP27 உச்சி மாநாடு

இஞ்ஞாயிறு நண்பகலில் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரையாற்றியபின்னர், எகிப்தில் நடைபெற்றுவரும் காலநிலை மாற்றம் குறித்த உலக மாநாட்டை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாறு, இம்மாநாட்டில் கலந்துகொள்வோரை ஊக்கப்படுத்தியுள்ளார்.

உலகம் வெப்பமடைந்து வருவதற்கு காரணமான கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பது குறித்த இவ்வுலக மாநாட்டில் ஏறத்தாழ 200 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபெற்று வருகின்றனர்.

Laudato Si’

சூழலியல் மனமாற்றத்தை ஊக்குவிக்கும்பொருட்டு, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவையால் தொடங்கப்பட்டுள்ள Laudato Si’ செயல்திட்டத்தில் தனிநபர்கள், குடும்பங்கள் கழகங்கள், தொழில்முனைவோர், மத, கலாச்சார, மற்றும், நலவாழ்வு நிறுவனங்கள் என ஏறத்தாழ ஆறாயிரம் பேர் பங்குகொள்கின்றனர்.

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமிக்கோளத்தைப் பராமரிப்பது குறித்த, Laudato Si’ அதாவது இறைவா உமக்கே புகழ் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருமடல் 2015ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 November 2022, 14:59