தேடுதல்

விமான நிலையம் ஒன்றில் காத்திருப்பு இடம் விமான நிலையம் ஒன்றில் காத்திருப்பு இடம்   (©Photobeps - stock.adobe.com)

நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்திடம் சுற்றுலா மேய்ப்புப்பணி.

சுற்றுலா பயணிகளுக்கான மேய்ப்புப்பணி, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் பொறுப்பிலிருந்து நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்திடம் ஒப்படைக்கப்படுகிறது

மேரி தெரேசா: வத்திக்கான்

சுற்றுலா பயணிகளுக்கான மேய்ப்புப்பணி, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் பொறுப்பிலிருந்து நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்திடம் ஒப்படைக்கப்படுகிறது என்று, அக்டோபர் 01, இச்சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அதிகாரப்பூர்வ ஆணையில் கூறப்பட்டுள்ளது.  

லொசர்வாத்தோரே ரொமானோ திருப்பீட நாளிதழில் பிரசுரிக்கப்படுவதோடு, திருத்தந்தையின் இந்த ஆணை, அக்டோபர் 01, இச்சனிக்கிழமையன்று நடைமுறைக்கு வருகின்றது என்று, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் மைக்கிள் செர்னி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாண்டு செப்டம்பர் 7ம் தேதி, கர்தினால் செர்னி அவர்கள், திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்தபோது, சுற்றுலா மேற்கொள்ளும் கத்தோலிக்கருக்குத் தேவையான அனைத்தும் நற்செய்தி அறிவிப்புப் பணியைச் சார்ந்திருப்பதால், இந்தப் பணிப்பொறுப்பு, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்திடம் ஒப்படைக்கப்படுவது குறித்து திருத்தந்தை அறிவித்தார்.

1988ஆம் ஆண்டு ஜூன் 28ம் தேதி வெளியிடப்பட்ட Pastor Bonus திருத்தூது கொள்கைத் திரட்டு, சுற்றுலாப் பயணிகளின் மேய்ப்புப்பணி அக்கறை குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பு, திருப்பீட குடிபெயர்ந்தோர் மற்றும், புலம்பெயர்ந்தோர் அவையிடம் ஒப்படைக்கப்பட்டது.

2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி Humanam progressionem என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட  Motu Proprio அறிக்கை வழியாக, அப்பொறுப்பு ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சனிக்கிழமையன்று அப்பொறுப்பு,  நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 October 2022, 13:53