தேடுதல்

டெக்சாஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி! டெக்சாஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி!   (©Nuri Vallbona)

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்குத் திருத்தந்தை செபம்

“வன்முறையை விரும்புபவர்கள் அன்பின் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்”: திருத்தந்தை பிரான்சிஸ்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

டெக்சாஸ் மாநிலம் Uvalde நகரிலுள்ள Robb தொடக்கப்பள்ளியில் நடந்த பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ், வன்முறைக்கு ஆசைப்படுபவர்கள் அதற்குப்  பதிலாக உடன்பிறந்த உணர்வுநிலை மற்றும் அன்பின் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார்.

San Antonioவின் பேராயர் Gustavo Garcia-Siller அவர்களுக்குத் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் திருத்தந்தையின் பெயரில் தான் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள இத்தந்தி செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.

இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது உடனிருப்பையும், கொல்லப்பட்ட அன்பான குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள், கடவுளின் இரக்கப்பெருக்கத்தால் நிறையமைதி அடைய செபிப்பதாகவும், அச்செய்தியில் உறுதியளித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தீமை உங்களை வெல்லவிடாதீர்கள், நன்மையால் தீமையை வெல்லுங்கள் (உரோ 12:21) என்ற பவுலடியாரின் வார்த்தையை மேற்கோள்காட்டி, வன்முறையை விரும்புபவர்கள் அன்பின் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டுமெனக் கூறி, தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கி, தனது தந்தி செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 24, இச்செவ்வாயன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் Texas மாநிலத்தின் Uvalde நகரிலுள்ள, Robb தொடக்கப் பள்ளிக்குள் 18 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்து, தாறுமாறாகச் சுட்டதில் 19 சிறார் மற்றும், இரண்டு ஆசிரியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 May 2022, 14:37