உக்ரைன் நாட்டிற்காக ஒன்றிணைந்து செபிப்போம்
மேரி தெரேசா: வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போரில் ஈடுபட்டுள்ள, உக்ரைன் மற்றும், இரஷ்யா ஆகிய நாடுகளை மனதில்கொண்டு, போர் எப்போதும் தோல்வியையே வெளிப்படுத்தும் என்றும், உக்ரைன் நாட்டிற்காக ஒன்றிணைந்து செபிப்போம் என்றும், தன் டுவிட்டர் பக்கத்தில் செய்திகளைப் பதிவுசெய்துள்ளார்.
"ஒவ்வொரு போரும், நாம் காண்கின்ற உலகை மோசமான நிலையிலே விட்டுச்செல்கின்றது. போர் என்பது, அரசியல், மற்றும், மனித சமுதாயத்தின் தோல்வியாகும். தீமையின் சக்திகளுக்கு முன்பாகத் தோல்வியைத் தழுவுவதாகும், மற்றும், அச்சக்திகளுக்கு வெட்கத்துடன் சரணடைவதாகும் என்ற சொற்களை, திருத்தந்தை, தன் டுவிட்டர் செய்தியில் வெளியிட்டுள்ளார்.
அனைவரும் உடன்பிறந்தோர் என்ற தன் திருமடலை மையப்படுத்தி, இவ்வாறு தன் டுவிட்டர் பக்கத்தில் செய்திகளைப் பதிவுசெய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். அப்பக்கத்தில், திருச்சிலுவை படம் ஒன்றும், அதற்குக் கீழ் இரஷ்யம் மற்றும், உக்ரைன் மொழிகளில் திருத்தந்தையின் எண்ணங்களும் எழுதப்பட்டுள்ளன.
மேலும், பிப்ரவரி 25, இவ்வெள்ளியன்று, உக்ரைன் நாட்டின் கிரேக்க கத்தோலிக்கப் பேராயர் Sviatoslav Shevchuk அவர்களோடு தொலைபேசியில் உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டின் அமைதிக்காகத் தான் தொடர்ந்து செபிப்பதாக உறுதி கூறியுள்ளார்.
இன்னும், பிப்ரவரி 26, இச்சனிக்கிழமையன்று, Sovereign Military Order of Malta எனப்படும் மால்ட்டா கத்தோலிக்க பிறரன்பு அமைப்பின் பிரதிநிதிகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினர்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்