தேடுதல்

லெஸ்போஸ் தீவில் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம் 2016) லெஸ்போஸ் தீவில் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம் 2016) 

சைப்ரஸ், கிரீஸ் திருத்தூதுப் பயணம், உடன்பிறப்பு உணர்வின் ஊற்று

காலநிலை மாற்ற நெருக்கடியின் அச்சுறுத்தல் அதிகமாக உணரப்படும் இக்காலத்தில், நாம், வெவ்வேறான வழிகளால் பிரிந்துபோகாமல், ஒன்றுசேர்ந்து பயணத்தைத் தொடர, மத்தியதரைக் கடல் நமக்கு அழைப்பு விடுக்கின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

டிசம்பர் 2, வருகிற வியாழன் முதல், 6 திங்கள் வரை, தான் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் சைப்ரஸ், மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 27, இச்சனிக்கிழமையன்று காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

வரலாறு, கலாச்சாரம், மற்றும், நற்செய்தியால் ஆசீர்வதிக்கப்பட்ட சிறப்புவாய்ந்த உங்கள் பூமிக்கு வந்த மாபெரும் முதல் மறைப்பணியாளர்கள், குறிப்பாக, திருத்தூதர்கள் பவுல்,  பர்னபாஸ் ஆகிய இருவரின் அடிச்சுவடுகளில் மகிழ்ச்சியோடு வருகிறேன் என்று, தன் செய்தியைத் துவக்கியுள்ள திருத்தந்தை, வேர்களுக்குத் திரும்புவதும், நற்செய்தியின் மகிழ்ச்சியை மீண்டும் கண்டுணர்வதும், திருஅவைக்கு முக்கியம் என்று கூறியுள்ளார்.

உடன்பிறப்பு உணர்வின் ஊற்றில் சந்திப்பு

உலகளாவிய ஒருங்கிணைந்த மாமன்றப் பயணத்தை திருஅவை துவக்கியிருக்கும் இக்காலக் கட்டத்தில் மிகவும் விலைமதிப்பற்ற உடன்பிறப்பு உணர்வின் ஊற்றில், உங்களை சந்திப்பதன் வழியாக, தனது தாகத்தைத் தணிக்கமுடியும் என்று தான் நம்புவதாக உரைத்துள்ள திருத்தந்தை, மாமன்ற அருளையும், திருத்தூது உடன்பிறப்பு உணர்வையும் நான் அதிகமாக விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

சைப்ரஸ் மற்றும் கிரீஸ் நாடுகளின் ஆர்த்தடாக்ஸ் சபைகளின் தலைவர்களான, முதுபெரும் தந்தையர் கிறிஸ்சோஸ்தோமோஸ், எரோனிமோஸ் ஆகிய இருவரையும் நன்மதிப்போடு, அமைதியின் ஆண்டவரின் பெயரால் சந்திக்க ஆவலாக உள்ளேன் என்று கூறியுள்ள திருத்தந்தை, அந்நாடுகளின் சிறுபான்மை சமுதாயமான கத்தோலிக்கருக்கு உலகளாவியத் திருஅவையின் ஊக்கத்தை பாசத்தோடு கொண்டுவருகிறேன் என்று கூறியுள்ளார்.

உங்களைச் சந்திப்பது, ஐரோப்பாவின் பழங்கால ஊற்றுகளிலிருந்து, நீர்பருகும் வாய்ப்பைப் வழங்குகிறது எனவும், சைப்ரஸ் குடியரசு, ஐரோப்பியக் கண்டத்தில், புனித பூமிக்குத் தொலைவில் அமைந்துள்ளது, கிரீஸ் நாடு, பழமையான கலாச்சாரத்தின் இல்லமாகும், நற்செய்தி பரவுவதற்கும், மிகப்பெரும் கலாச்சாரங்களின் வளர்ச்சிக்கும் இடமாக விளங்கிய மத்தியதரைக் கடலை ஐரோப்பா புறக்கணிக்க முடியாது என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

மத்தியதரைக் கடல், மிகப்பெரிய கல்லறை

காலநிலை மாற்ற நெருக்கடியின் அச்சுறுத்தல் அதிகமாக உணரப்படும் இக்காலத்தில், நாம், வெவ்வேறான வழிகளால், குறிப்பாக, பெருந்தொற்றுக்கு எதிராக மேற்கொள்ளும் தனித்தனியான நடவடிக்கைகளால், பிரிந்துபோகாமல் ஒன்றுசேர்ந்து பயணத்தைத் தொடர, பல நிலப்பகுதிகளை இணைக்கும் மத்தியதரைக் கடல் அழைப்பு விடுக்கின்றது என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

பல மக்களைத் தழுவிக்கொள்ளும் கடலின் திறந்த துறைமுகங்கள், ஒன்றிணைந்து வாழ்வதற்குரிய வளங்கள் ஒருவர் ஒருவரை ஏற்பதில் அடங்கியுள்ளது என்பதை நினைவுபடுத்துகின்றன என்றும், போர் மற்றும், வறுமையால் அண்மை ஆண்டுகளிலும், ஏன் இன்றும்கூட, இக்கண்டத்தின் கடற்கரைகளுக்கும், மற்ற இடங்களுக்கும் வந்துசேரும் மக்களை நினைத்துப் பார்க்கிறேன் என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

இம்மக்கள் உபசரிக்கப்படுவதில்லை, அதற்கு மாறாக, வெறுப்பையும் உரிமை மீறல்களையும் எதிர்கொள்கின்றனர், இவர்கள் நம் சகோதரர் சகோதரிகள், இவர்களில் பலர் நமது கடலில் உயிரிழந்துள்ளனர், நமது மத்தியதரைக் கடல், மிகப்பெரிய கல்லறையாக உள்ளது என்றும், திருத்தந்தை கூறியுள்ளார். 

ஒருங்கிணைப்பிலேதான் உடன்பிறப்பு உணர்வு மலரும் என்ற உறுதியில், மனிதகுலத்தின் ஊற்றுக்கு, ஒரு திருப்பயணியாக, மீண்டும் லெஸ்போஸ் தீவுக்குச் செல்லவிருக்கிறேன் என்றுரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய உணர்வுகளோடு உங்களைச் சந்திக்கவுள்ளேன், உங்களுக்காகச் செபிக்கின்றேன் என்று தன் காணொளிச் செய்தியை நிறைவுசெய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 November 2021, 15:17