தேடுதல்

திருத்தந்தையுடன், கர்தினால் சில்வானோ தொமாசி திருத்தந்தையுடன், கர்தினால் சில்வானோ தொமாசி  

Sovereign Order of Maltaவின் புதுப்பித்தல் பணிக்கு பாராட்டு

மால்ட்டா சபைக்கு, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஒத்துழைப்பு வழங்கும் உறுப்பினர்கள் மற்றும், தன்னார்வலர்களுக்கு திருத்தந்தை நன்றி

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

Sovereign Order of Malta எனப்படும் மால்ட்டா மருத்துவமனை கத்தோலிக்க பொதுநிலையினர் உலகளாவிய சபையின் (S.M.O.M.) புதுப்பித்தலுக்கு, சிறப்புப் பிரதிநிதியாக தான் நியமித்துள்ள கர்தினால் சில்வானோ தொமாசி அவர்கள் ஆற்றிவரும் பணிகளுக்கு, நன்றியும், பாராட்டும் தெரிவித்து, மடல் ஒன்றை அவருக்கு அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த மால்ட்டா பொதுநிலையினர் சபையின் கொள்கை அமைப்பு, மற்றும், அதன் சட்ட விதிமுறைகளைப் புதுப்பிக்கும் பணிக்கு, கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டது முதல், கர்தினால் தொமாசி அவர்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகளை ஊக்கப்படுத்தியுள்ள திருத்தந்தை, நடைபெறவிருக்கும் அந்த சபையின் சிறப்பு பொதுப் பேரவை, அச்சபையின் வாழ்வில், தேவையான புதுப்பித்தலை உறுதிசெய்யும் அம்சங்களைக் கொணரும் என்ற தன் நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார்.

கர்தினால் தொமாசி அவர்கள், மால்ட்டா பொதுநிலையினர் சபையின் ஆன்மீக, மற்றும், நன்னெறி வாழ்வில் புதுப்பித்தலை உறுதிசெய்வதற்கு தான் வழங்கிய புதிய அதிகாரம்பற்றி குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, கர்தினால் தொமாசி அவர்கள் மீது தான் வைத்திருந்த முழு நம்பிக்கைக்கு ஏற்ப, அவர் பணியாற்றி வருகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெறவிருக்கின்ற பொதுப் பேரவையில் எழக்கூடிய எந்தப் பிரச்சனையையும் எதிர்கொள்வதற்கு, கர்தினால் தொமாசி அவர்களுக்கு முழு அதிகாரத்தையும் வழங்கியுள்ளதாக அம்மடலில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, அந்தப் பொதுப் பேரவை, புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும்வரை, அச்சபையின் தலைவராகப் பணியாற்ற, Marco Luzzago அவர்களுக்கும் அனுமதியளித்துள்ளார்.

கர்தினால் தொமாசி அவர்களுக்கு அதிகாரம்

மால்ட்டா சபையின் பொதுப் பேரவை நடைபெறும் தேதியைக் குறிக்கவும், அப்பேரவையில் இணைத் தலைவராக செயல்படவும், அப்பொதுப் பேரவை நடைபெறும் முறை குறித்த விதிமுறைகளை அமைக்கவும் போன்ற அதிகாரங்களை, கர்தினால் தொமாசி அவர்களுக்கு திருத்தந்தை வழங்கியுள்ளார்.

இறுதியில் மால்ட்டா சபைக்கு, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஒத்துழைப்பு வழங்கும் உறுப்பினர்கள் மற்றும், தன்னார்வலர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 October 2021, 14:20