Košice நகரின் Lokomotiva அரங்கத்தில் இளையோர் சந்திப்பு
மேரி தெரேசா: வத்திக்கான்
மற்றவரைத் தீர்ப்பிடுவதும், மற்றவர் மீது முற்சார்பு எண்ணங்களைக் கொண்டிருப்பதும், இடைவெளியை அதிகரிக்கும். காழ்ப்புணர்வும், சுடுசொற்களும் நல்லுறவுகளுக்கு ஒருபோதும் உதவாது. மற்றவரை ஓரங்கட்டுவது எவ்விதப் பலனையும் கொண்டுவரப்போவதில்லை. மாறாக, அமைதியான நல்லிணக்க வாழ்வே, ஒன்றித்து வாழ்வதற்கு உதவும். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சொற்களை, செப்டம்பர் 14, இச்செவ்வாய் மாலையில், சுலோவாக்கியா நாட்டின், Košice நகரில் நடத்திய இரு முக்கிய நிகழ்வுகளில் கூறினார். Košice நகரில் ரோமா இன மக்களைச் சந்தித்தபின்னர், அந்நகரின் Lokomotiva அரங்கத்தில் இளையோரைச் சந்தித்தார் திருத்தந்தை. இந்த அரங்கத்தில்தான் 2018ம் ஆண்டில், Anna Kolesarova அவர்கள் அருளாளராக அறிவிக்கப்பட்ட திருப்பலி நடைபெற்றது. இச்சந்திப்பில் முதலில் மூன்று இளையோர் திருத்தந்தையிடம் சாட்சியம் பகர்ந்தனர். Peter, Zuzka ஆகிய இருவரும், ஒருவர் ஒருவரை அன்புகூர்தல் மற்றும், சிலுவையை அன்புகூர்தல் பற்றியும், Petra Filová, கடவுளின் இரக்கத்தைச் சந்திக்கும்போது எதிர்கொள்ளும் தடைகளை சமாளிக்கும் முறை பற்றியும், திருத்தந்தையிடம் கேள்விகளை முன்வைத்தனர். இவர்களின் கேள்விகளுக்கு, திருத்தந்தையும் ஆர்வத்தோடு பதிலளித்தார். அஞ்சாமல் கனவு காணுங்கள் என்று இளையோரை ஊக்கப்படுத்தி, Košice நகரிலிருந்து, 329 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, பிராத்திஸ்லாவா நகருக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அந்நகர் திருப்பீட தூதரகத்தில் இரவு உணவருந்தி உறங்கச் சென்றார், திருத்தந்தை. இத்துடன், இத்திருத்தூதுப் பயணத்தின் மூன்றாம் நாள் பயண நிகழ்வுகள் முடிவுற்றன.