தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குப் பதிலாக, பேராயர் Rino Fisichella அவர்கள் திருப்பலி நிறைவேற்றினார் - 250721 திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குப் பதிலாக, பேராயர் Rino Fisichella அவர்கள் திருப்பலி நிறைவேற்றினார் - 250721 

இளையோருக்கும் முதியோருக்கும் இடையே உடன்படிக்கை

திருத்தந்தை : நம் தாத்தாக்கள் மற்றும் பாட்டிகள் நம்மை அன்புகூர்ந்ததன் வழியாக நாம் வளர்ந்துள்ளோம், அதுபோல் நம் அன்பு, மற்றும் அக்கறையின் பதில்மொழி இருக்கவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருஅவையில் முதல்முறையாகச் சிறப்பிக்கப்படும், தாத்தாக்கள், பாட்டிகள், மற்றும் முதியோர் நாளையொட்டி, புனித பேதுரு பெருங்கோவிலில் நிறைவேற்றப்பட்ட திருப்பலியில், வாழ்வைப் பகிர்வதில், இளையோருக்கும் முதியோருக்கும் இடையே நிலவவேண்டிய உடன்படிக்கையைக் குறித்து திருத்தந்தை எழுதியிருந்த மறையுரை வாசிக்கப்பட்டது.

அறுவை சிகிச்சை முடிந்து, மருத்துவமனையிலிருந்து திரும்பி, இன்னும் ஓய்வெடுத்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருப்பலியில் நேரடியாக கலந்துகொள்ளமுடியாத நிலையில், தான் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த மறையுரையை, பேராயர் Rino Fisichella அவர்கள் வழியாக வழங்கினார்.

ஜூலை 25, ஞாயிற்றுக்கிழமையின் நற்செய்தி எடுத்துரைக்கும், அப்பம் பலுகுதல் புதுமையைக் குறித்து தன் கருத்துக்களை தன் மறையுரையில் பகிர்ந்திருந்த திருத்தந்தை, பசியாக இருந்த கூட்டத்தை இயேசு நோக்கியது, அவர்களோடு பகிர்ந்தது, மீதியானவைகளை திரட்டச்சொன்னது, என்ற மூன்று கருத்துக்களை மையமாக வைத்து, விளக்கங்களை வழங்கியிருந்தார்.

தனக்குச் செவிமடுக்க வந்திருந்த கூட்டத்தின் பசியை காணும் இயேசு, அவர்கள் ஒவ்வொருவரின் தேவையை நிறைவு செய்ய ஆவல் கொள்வதுபோல், நம் தாத்தாக்கள் மற்றும் பாட்டிகள், நம்மை உற்றுநோக்கி, நம்மை அன்புகூர்ந்ததன் வழியாக, நாம் வளர்ந்துள்ளோம், அதுபோல், நம் அன்பு, மற்றும் அக்கறையின் பதில்மொழி இருக்கவேண்டும் என, மறையுரையில் விண்ணப்பித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒரு சிறுவன், தன்னிடம் இருந்ததை, பிறருடன் பகிர முன்வந்ததே, இப்புதுமையின் முக்கியப் பகுதியாக, உள்ளது என, தன் மறையுரையில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோரும், முதியோரும், தங்களிடையே, வாழ்வின் கொடைகளை பகிர முன்வரும் உடன்படிக்கையுடன் செயல்படவில்லையெனில், வருங்காலம் கேள்விக்குறியாகிவிடும் எனவும் தெரிவித்தார்.

திருப்பலிக்கு வந்த தாத்தாக்கள் பாட்டிகளுக்கு சிறார், பூக்களை வழங்கி வரவேற்றனர்
திருப்பலிக்கு வந்த தாத்தாக்கள் பாட்டிகளுக்கு சிறார், பூக்களை வழங்கி வரவேற்றனர்

வருங்காலத்தை முன்னுரைக்கும் இளையோரும், இளையோருக்கு தடையாக இல்லாமல், அவர்களோடு தங்கள் அனுபவங்களை பகிரும் முதியோரும், ஒன்றிணைந்து கனவுகாணவும், வருங்காலத்திற்கு தயாரிக்கவும், அவர்களிடையே இடம்பெறவேண்டிய உடன்படிக்கையின் முக்கியத்துவம் குறித்து, தன் மறையுரையில் எடுத்தியம்பினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மிச்சமான துண்டுகளை ஒன்று திரட்டுமாறு, இயேசு, இப்புதுமையின் இறுதியில் கேட்டுக்கொண்டது, இறைவனின் படைப்பில் எதுவும் இழக்கப்படக்கூடாது, குறிப்பாக மக்கள் எவரும், தேவையற்றவர்கள் என ஒதுக்கப்படக்கூடாது என்பதை காட்டுகிறது என,  எடுத்துரைத்தார் திருத்தந்தை.

தன் மறையுரையின் இறுதியில், நம் தாத்தாக்கள், பாட்டிகள், நம்மை உரமூட்டி வளர்த்ததுபோல், நாமும், அவர்களின் கனவுகளும், வாழ்வும் இழக்கப்படாமல் இருக்க, அவர்களை பாதுகாப்போம் என்ற விண்ணப்பத்தையும் விடுத்திருந்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குப் பதிலாக, புதிய வழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவையின் தலைவர், பேராயர் Rino Fisichella அவர்களால் நிறைவேற்றப்பட்ட இத்திருப்பலியின் இறுதியில், இளையோர், முதியோருக்கு, வண்ணப் பூக்களை வழங்கினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 July 2021, 13:55