தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ், பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத், கோமகன் பிலிப் (03042014) திருத்தந்தை பிரான்சிஸ், பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத், கோமகன் பிலிப் (03042014) 

இளவரசர் பிலிப் அவர்களின் மரணத்திற்கு திருத்தந்தை இரங்கல்

முன்னாள் கப்பற்படை வீரரான பிலிப் அவர்கள், அரசி எலிசபெத்தைத் திருமணம் செய்துகொண்டபின், பெரும்பாலும் மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டிருந்தார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் அவர்களின் கணவரும், பிரிட்டன் இளவரசருமான, எடின்பர்க் கோமகன் பிலிப் அவர்கள், ஏப்ரல் 09, இவ்வெள்ளியன்று, இறைபதம் அடைந்துள்ளதை முன்னிட்டு, அந்நாட்டு அரச குடும்பத்தினருக்கு தனது  அனுதாபத்தையும், செபங்களையும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இளவரசர் பிலிப் அவர்கள் இறைவனடி சேர்ந்ததை முன்னிட்டு, அரசி இரண்டாம் எலிசபெத் அவர்களுக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால் அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில், அந்த அரசகுடும்பத்தினருக்கு திருத்தந்தையின் இதயப்பூர்வமான இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளவரசர் பிலிப் அவர்கள், தன் திருமணம், குடும்பம் ஆகியவற்றுக்குப் பிரமாணிக்கமாக இருந்தது, அவரின் சிறப்பான பொதுநலப் பணிகள், வருங்காலத் தலைமுறைகளின் கல்விக்கும், அவர்களின் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணத்தோடு அவர் ஆற்றிய பணிகள் போன்றவற்றை திருத்தந்தை பாராட்டுவதாக, அத்தந்திச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பிலிப் அவர்களின் மறைவால் வருந்தும் அரசி இரண்டாம் எலிசபெத் அவர்கள் மீதும், மற்ற அனைவர் மீதும், உயிர்த்த ஆண்டவரின் நம்பிக்கை, ஆறுதல், மற்றும், அமைதி ஆகிய ஆசிர்வாதங்கள் பொழியப்படுமாறு, திருத்தந்தை செபிக்கின்றார் எனவும், அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இங்கிலாந்தின் Westminster போராயர் கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்களும், இளவரசர் பிலிப் அவர்களின் கடமை தவறாத, நேர்மையான வாழ்வைப் பாராட்டியுள்ளதோடு, அரசு குடும்பத்தினருக்கு தன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.

முதிர்ந்த வயது காரணமாக, கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த 99 வயது நிரம்பிய இளவரசர் பிலிப் அவர்கள், ஏப்ரல் 09, இவ்வெள்ளியன்று, இலண்டனில் இறைபதம் சேர்ந்தார்.

இளவரசர் பிலிப் அவர்கள், பிரிட்டன் அரச குடும்ப வரலாற்றில், மிக அதிக காலம் இளவரசராக இருந்தவர். முன்னாள் கப்பற்படை வீரரான பிலிப் அவர்கள், அரசி எலிசபெத்தைத் திருமணம் செய்துகொண்டபின், பெரும்பாலும் மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 April 2021, 15:03