Fratelli tutti புதிய இணையதளம்
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
ஆண்டவராகிய இயேசுவே வாரும் என்ற இறைவேண்டலை, நாம் எப்போதும், எல்லா நேரங்களிலும் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 01, இச்செவ்வாயன்று விண்ணப்பம் விடுத்துள்ளார்.
திருவருகைக் காலம் தொடங்கியுள்ள இக்காலக்கட்டத்தில், “ஆண்டவராகிய இயேசுவே வாரும்” என்ற, பாரம்பரிய இறைவேண்டலின் முக்கியத்துவத்தை, திருவருகைக் கால இறைவேண்டல் (#Advent prayer) என்ற 'ஹாஷ்டாக்'குடன், இச்செவ்வாயன்று, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியில் வெளியிட்டிருந்தார்.
“கூட்டங்கள், படிப்பு, பணி, மற்றும், முக்கிய தீர்மானங்கள் ஆகியவற்றை மேற்கொள்வதற்கு முன்னரும், முக்கியமான நேரங்கள், அல்லது, சோதனைகளை எதிர்கொள்ளும் சமயங்களிலும், “ஆண்டவராகிய இயேசுவே, வாரும்!” (தி.வெ. 22:20) என்ற பாரம்பரிய இறைவேண்டலை அடிக்கடி சொல்வோம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.
Fratelli tutti புதிய இணையதளம்
மேலும், கடந்த அக்டோபர் மாதம் 3ம் தேதி, இத்தாலியின் அசிசி நகரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கையெழுத்திட்டு, அதற்கு அடுத்த நாள் வெளியிடப்பட்ட, “அனைவரும் உடன்பிறந்தோர் (Fratelli tutti)” என்ற அவரது புதிய திருமடலுக்கென, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, புதிய இணையதளம் ஒன்றை, டிசம்பர் 01, இச்செவ்வாயன்று தொடங்கியுள்ளது.
“அனைவரும் உடன்பிறந்தோர்” என்ற திருமடலுக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள புதிய இணையதளத்தில், டுவிட்டர், முகநூல், இன்ஸ்டகிராம் போன்ற சமுதாய ஊடகங்கள் வழியாக, படங்கள் மற்றும், தகவல்கள் பதிவுசெய்யப்படும். என்று, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, இச்செவ்வாயன்று செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்