தேடுதல்

மறைக்கல்வியுரையின்போது - 251120 மறைக்கல்வியுரையின்போது - 251120 

மறைக்கல்வியுரை - புதிதாகப் பிறந்த திருஅவையில் இறைவேண்டல்

நற்செய்திக்காக, சித்ரவதைகளை எதிர்கொள்ளும் அனைத்து மறைப்பணியாளர்களுக்கும் மனவுறுதியையும் கொள்கைப்பிடிப்பையும் வழங்குபவராக உள்ளார் தூய ஆவியார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

இத்தாலி நாட்டில் கொரோனா கொள்ளைநோயின் பரவலைத் தடுக்கும் நோக்கத்தில், இத்தாலிய அரசு விதித்துள்ள பல கட்டுப்பாடுகளை மதித்து, பின்பற்றும் வகையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடுவதை தவிர்க்க உதவும் நோக்கத்தில், வலைத்தொடர்பு வழியாக தன் புதன் மறைக்கல்வியுரைகளை வழங்கி வருகிறார். கோவிட்-19 நோயின் இரண்டாம் கட்ட பரவல், தற்போது, பல்வேறு நாடுகளில் இடம்பெற்று வருவதால், திருத்தந்தையின் மறைக்கல்வியுரை, இம்மாதம் முதல் புதனிலிருந்து, வலைத்தொடர்பு வழியாகவே இடம்பெற்று வருகிறது.

இறைவேண்டல் குறித்த தன் மறைக்கல்வித் தொடரில், நவம்பர் 25, இப்புதனன்று, 'புதிதாக பிறந்த திருஅவையில், இறைவேண்டல் எத்தகைய ஊக்கத்தை வழங்கியது' என்பது குறித்து எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். முதலில், திருத்தூதர் பணி நூலின் 4ம் பிரிவிலிருந்து ஒரு பகுதி, பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டபின், திருத்தந்தையின் சிந்தனைப் பகிர்வு தொடர்ந்தது.

திருத்தூதர் பணிகள் நூல் 4: 23-24.29.31

விடுதலை பெற்ற அவர்கள், தங்களைச் சேர்ந்தவர்களிடம் வந்து, தலைமைக் குருக்களும் மூப்பர்களும் தங்களுக்குக் கூறிய யாவற்றையும் அறிவித்தார்கள். இவற்றைக் கேட்ட யாவரும் ஒரே மனத்துடன் தங்கள் குரலைக் கடவுள்பால் எழுப்பி, பின்வருமாறு மன்றாடினர்; “‘ஆண்டவரே, விண்ணுலகையும் மண்ணுலகையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்தவர் நீரே’. […] இப்போதுகூட ஆண்டவரே, அவர்கள் அச்சுறுத்துவதைப் பாரும். உம் அடியார் முழுத் துணிவுடன் உமது வார்த்தைகளை எடுத்துக்கூற அருள் தாரும்.[…]  இவ்வாறு மன்றாடியவுடன் அவர்கள் கூடியிருந்த இடம் அதிர்ந்தது. அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களாய்க் கடவுளின் வார்த்தைகளைத் துணிவுடன் எடுத்துக் கூறினர்.

மறைக்கல்வியுரை

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, இறைவேண்டல் குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் இன்று, துவக்ககாலக் கிறிஸ்தவர்களின் மறைப்பணி நடவடிக்கைகளில் உறுதியான இறைவேண்டல் எவ்வாறு சக்திவாய்ந்த ஒன்றாக இருந்தது என்பது குறித்து நோக்குவோம். 'அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள்' (தி.ப. 2:42), என்று ஆதிகால கிறிஸ்தவர்களைப்பற்றி கூறுகிறார் புனித லூக்கா. இன்றும், திருஅவை வாழ்வின் மையமாக இருப்பது, இறைவேண்டலே. இறைவேண்டலே, நம்மை கிறிஸ்துவோடு இணைத்து, நற்செய்திக்கு சான்று பகர்வதை நம்மில் தூண்டி, உதவித்தேவைப்படுவோருக்கு பிறரன்பு செயல்களை ஆற்ற நமக்கு ஊக்கமளிக்கிறது. இறைவேண்டல் வழியே, நாம், உயிர்த்த இயேசுவின் வாழ்வை அனுபவிக்கிறோம். உயிர்த்த இயேசு, தூய ஆவியாரின் வல்லமையில் இவ்வுலகில் தொடர்ந்து குடியிருக்கிறார், குறிப்பாக, திருஅவையின் படிப்பினைகளிலும், அருளடையாளங்களிலும், ஒப்புரவு, அமைதி, நீதி என்பவற்றை உள்ளடக்கிய இறையரசை முன்னெடுத்துச்செல்லும் நம் முயற்சிகளிலும் இயேசு வாழ்ந்துகொண்டிருக்கிறார். கிறிஸ்துவின் நினைவை திருஅவையில் உயிரோட்டமாக வைத்திருப்பவர் தூய ஆவியார் என்கிறது திருஅவையின் மறைக்கல்வி.

இக்காலத்திலும், நற்செய்திக்காக, துன்பம் நிறை பயணங்களையும், ஆபத்துக்களையும், சித்ரவதைகளையும் எதிர்கொள்ளும் அனைத்து மறைப்பணியாளர்களுக்கும்,  மனவுறுதியையும், கொள்கைப்பிடிப்பையும் வழங்குபவராக உள்ளார், தூய ஆவியார். துவக்ககால கிறிஸ்தவர்களைப்போல், நாமும், தனிப்பட்ட, மற்றும், குழு இறைவேண்டல்களை வளர்ப்பதன் வழியாக, அன்பின் மூவொரு கடவுளுடன் மேலும் நெருங்கிய ஒன்றிப்பில் இருந்து, அதே அன்பை நம்மைச் சுற்றியுள்ள உலகிற்கு எடுத்துச் செல்வதற்கு கற்றுக் கொள்வோமாக.

இவ்வாறு, தன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருவருகைக்காலப் பயணத்தைத் தொடர, நம்மை தயாரித்துவரும் இவ்வேளையில், இயேசு கிறிஸ்துவின் ஒளி, நம் பாதைகளை ஒளிர்வித்து, நம் இதயத்தின் அனைத்து இருளையும் அகற்றுவதாக என வாழ்த்தினார். திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறில் நாம் சிறப்பித்த கிறிஸ்து அரசர் பெருவிழா குறித்து நினைவூட்டிய திருத்தந்தை,  இறையரசில் நம்மை இணைக்கவும், மீட்பளிக்கும் உண்மைக்கு நாம் சான்று பகர்பவர்களாக மாறவும், நம்மை இருளின் சக்தியிலிருந்து இயேசு கிறிஸ்து விடுவித்துள்ளதை, இந்தப் பெருவிழா நமக்கு நினைவூட்டுகிறது எனக் கூறினார்.

இறுதியில், முதியோர், இளையோர், நோயுற்றோர், புதுமணத் தம்பதியர் என அனைவருக்கும் தன் வாழ்த்துக்களை வெளியிட்டு, அனைவருக்கும், இறையாசீரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 November 2020, 12:00