தேடுதல்

அமைதிப் புறாவை பறக்க விட்ட திருத்தந்தை அமைதிப் புறாவை பறக்க விட்ட திருத்தந்தை 

அனைத்துலக அமைதி நாள் – திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

"அமைதியை விரும்புவது, அனைத்து மனித இதயங்களின் ஆழமான விருப்பம். இதைவிடக் குறைவான எதையும் தேடி திருப்தியடைய நம்மையே விட்டுவிடக் கூடாது" - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 21, இத்திங்களன்று, அனைத்துலக அமைதி நாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதியின் தேவையை வலியுறுத்தி, இரு டுவிட்டர் செய்திகளை வெளியிட்டிருந்தார்.

"இறைவனிடமிருந்து வரும் நம் பொதுவான துவக்கத்தின் அடிப்படையில், உண்மையான உடன்பிறந்த தன்மையை முனைப்புடன் தொடர்வது நமது தேவை. அமைதியை விரும்புவது, அனைத்து மனித இதயங்களின் ஆழமான விருப்பம். இதைவிடக் குறைவான எதையும் தேடி திருப்தியடைய நம்மையே விட்டுவிடக் கூடாது" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

"ஒப்புரவை நோக்கியப் பயணத்திற்கு, பொறுமையும், நம்பிக்கையும் அவசியம். அமைதியின் மீது நம்பிக்கை கொள்ளாமல், அமைதியை உருவாக்க இயலாது" என்ற சொற்களை, திருத்தந்தை தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியில் வெளியிட்டார்.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, 1981ம் ஆண்டு, அனைத்துலக அமைதி நாளை உருவாக்கியது.

இந்த உலக நாளையொட்டி, உலகெங்கும் போர்நிறுத்தம் நடைபெறவேண்டும் என்றும், இந்நாள், வன்முறை ஏதுமற்ற உலக நாளாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென்றும் 2001ம் ஆண்டு, ஐ.நா.வின் பொது அவையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

2020ம் ஆண்டு சிறப்பிக்கப்பட்ட அனைத்துல அமைதி நாளுக்கென, "அனைவரும் ஒன்றாக அமைதியை வடிவமைக்க" (Shaping Peace Together) என்பது, மையக்கருத்தாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

உலகை வதைத்துவரும் கோவிட் 19 கொள்ளைநோயை ஒரு காரணமாகப் பயன்படுத்தி, வெறுப்பு, புறக்கணிப்பு ஆகியவற்றை வளர்க்கும் முயற்சிகளைத் தடுப்பதில், உலக அரசுகள், தனி கவனம் செலுத்தும்படி, ஐ.நா. நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

கோவிட் 19 கொள்ளைநோயின் உலகளாவியப் பரவலின் விளைவுகளைத் தடுக்கும் ஒரு முயற்சியாக, உலகெங்கும் மோதல்கள் நடைபெறும் இடங்களில் போர்நிறுத்தம் நிகழவேண்டும் என்று, ஐ.நா. நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், இவ்வாண்டு மார்ச் 23ம் தேதி அழைப்பு விடுத்திருந்தார்.

மார்ச் 29ம் தேதி, ஞாயிறன்று, ஐ.நா. தலைமைச் செயலர் விடுத்த இந்த விண்ணப்பத்தை, தன் மூவேளை செப உரையில் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாடுகள் வகுத்துள்ள எல்லைகளை மதிக்காமல் எங்கும் பரவியுள்ள தொற்றுக்கிருமியை எதிர்த்துப் போராட, மனிதர்களாகிய நாம், நாடுகளைக் கடந்து, உலகளாவிய அமைதியை உருவாக்கும் முயற்சியை மேற்கொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 September 2020, 14:18