தேடுதல்

புதன் மறைக்கல்வியுரையின்போது - 160920 புதன் மறைக்கல்வியுரையின்போது - 160920 

மறைக்கல்வியுரை : இயற்கையை பாதுகாக்க வேண்டிய கடமை

படைப்பிற்குள் நமக்கேயுரிய இடத்தைக் குறித்தும், இவ்வுலகையும், ஒருவர் ஒருவரையும் மதித்து அக்கறை காட்ட நமக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு குறித்தும் ஆழ்ந்து சிந்திப்போம் - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

'உலகை குணப்படுத்தல்’ என்ற தலைப்பில், ஆகஸ்ட் மாத துவக்கத்திலிருந்து, புதன் மறைக்கல்வி உரைகளில், தன் சிந்தனைகளை பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 16, இப்புதனன்று, 'இயற்கை பாதுகாப்பு குறித்து சிந்திக்கவேண்டிய தேவை' என்ற தலைப்பில் உரையை வழங்கினார்.

கடந்த இரு வாரங்களைப்போல், இவ்வாரமும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்வத்திக்கானிலுள்ள புனித தமாசோ (San Damaso) வளாகத்திலேயே, திருப்பயணிகளைச் சந்தித்து உரை வழங்கினார். முதலில், தொடக்க நூல் 2ம் பிரிவில் காணப்படும், ஏதேன் தோட்டத்தில் மனிதரை இறைவன் குடியமர்த்திய பகுதி, பல மொழிகளில் வாசிக்கப்பட்டது. அதன்பின், திருத்தந்தை தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

ஆண்டவராகிய கடவுள் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்துத் தாம் உருவாக்கிய மனிதனை அங்கே வைத்தார். ஆண்டவராகிய கடவுள் கண்ணுக்கு அழகானதும் உண்பதற்குச் சுவையானதுமான எல்லா வகை மரங்களையும், தோட்டத்தின் நடுவில் வாழ்வின் மரத்தையும் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்தையும் மண்ணிலிருந்து வளரச் செய்தார். […] ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார். (தொ.நூ. 2,8-9.15)

மறைக்கல்வியுரை

அன்பு சகோதரரே, சகோதரிகளேஇன்றைய  கொள்ளை நோயைப் பற்றிதிருஅவையின் சமூகப் படிப்பினைகளின் ஒளியில், சிந்தனைகளைப் பகிர்ந்துவரும் நாம், மற்றவர்கள் மீது அக்கறைகொண்டு செயல்படும் மக்களுக்கு, குறிப்பாக, நோயாளிகள், வயதுமுதிர்ந்தோர், மற்றும், எளிதாக நோய்த் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் நிலையிலுள்ளோர் ஆகியோருக்கு தாராள மனதுடன் அக்கறை காட்டி சேவையாற்றுவோர் குறித்து சிந்தித்தோம். அதேவேளை, இவ்வுலகின் இயற்கை வளங்களைப் போற்றி பாதுகாக்கவேண்டிய கடமையைப் பற்றியும் சிந்தித்தோம். இவ்வுலகின் இயற்கை அழகை பலவேளைகளில் நாம் இரசிக்கத் தவறியதுடன், அதன் வளங்களைச் சுரண்டியும் வந்துள்ளோம். இவ்வுலகில், இறைவனின் படைப்பிற்குள் நமக்கேயுரிய இடத்தைக் குறித்தும், இவ்வுலகையும், ஒருவர் ஒருவரையும் மதித்து அக்கறை காட்ட நமக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு குறித்தும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கலையை நாம் புதிதாக கற்றுக்கொள்ளவேண்டும். ஒன்றில் ஒன்று தொடர்புடையதாக, ஒன்றையொன்று சார்ந்திருக்கும், இவ்வுலகை நாம் மௌனமாக ஆழ்ந்து சிந்திக்கும்போது, அனைத்துப் படைப்புகளின் மதிப்பையும், உண்மை அர்த்தத்தையும் கண்டுகொள்வோம். ஏனெனில், படைப்புகள் ஒவ்வொன்றும், தங்களுக்கேயுரிய வழியில் இறைவனின் முடிவற்ற ஞானம், நன்மைத்தனம், மற்றும், அழகைப் பிரதிபலிக்கின்றன. நாம், படைப்புகள் அனைத்தோடும் எவ்வாறு ஒருங்கிணைந்து செல்ல வேண்டியவர்கள் என்பதையும், இயற்கை வளங்களை, பொறுப்புடன் கண்காணிக்க வேண்டியவர்கள் என்பதையும், வருங்காலத் தலைமுறைகளுக்காக, அவற்றைப் பாதுகாக்க வேண்டியவர்கள் என்பதையும், படைப்பு குறித்த நம் ஆழ்ந்த சிந்தனை கற்றுத்தரும்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 September 2020, 10:56