தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

திருத்தந்தையின் டுவிட்டர்கள்

நம் வலுவற்றநிலையையும் கடந்து, அளவற்ற அழகைப் பார்க்கும் ஆண்டவர் நமக்குத் தேவைப்படுகின்றார், நம் வலுவின்மையில்கூட நாம் எவ்வளவு விலைமதிப்பற்றவர்கள் என்பதை அவரோடு சேர்ந்து கண்டுணர்வோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

ஏப்ரல் 21, இச்செவ்வாய் காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலி மற்றும், மறையுரையை மையப்படுத்தி, மூன்று டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“இந்நேரத்தில் மிகுந்த அமைதி நிலவுகிறது, நாம் பழக்கப்படாத, சற்று புதியதாக இருக்கின்ற இந்த அமைதி, செவிமடுப்பதற்கு நமக்குக் கற்றுக்கொடுப்பதாக” என்ற சொற்கள், திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில் வெளியாயின.

“செவிசாய்க்கும் நம் திறமையில் வளர, அனைவரும் ஒன்றிணைந்து செபிப்போம்” என்று #PrayTogether என்ற ஹாஷ்டாக்குடன் திருத்தந்தை வெளியிட்டுள்ள முதல் டுவிட்டர் செய்தியில், இச்செவ்வாய் திருப்பலியை, யூடியூப்பில் காண்பதற்கு, அதன் முகவரியும் https://www.youtube.com/watch?v=HjvD0HuK5jA வெளியிடப்பட்டுள்ளது.

இச்செவ்வாயன்று திருத்தந்தை வெளியிட்டுள்ள 2வது டுவிட்டர் செய்தியை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றிய மறையுரையை, (#HomilySantaMarta) ஹாஷ்டாக்குடன் இணைத்து பதிவு செய்துள்ளார்.

“பணம், வீண்பெருமை, புறங்கூறுதல் போன்ற பல காரியங்கள், குழுமங்களில் பிரிவினைகளை உருவாக்கும். ஆயினும், தூய ஆவியார், பிரிவினைகளிலிருந்து நம்மைக் காப்பாற்ற வருகிறார். தூய ஆவியாரே, நல்லிணக்கத்தின் அதிபர். இறைத்தந்தைக்கும், இறைமகனுக்கும் இடையேயுள்ள நல்லிணக்கமாக அவரே இருப்பதால், அவர் குழுமத்தில் நல்லிணக்கத்தை உருவாக்குகிறார்” என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் 2வது டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றுள்ளன.

இச்செவ்வாயன்று திருத்தந்தை வெளியிட்டுள்ள 3வது டுவிட்டர் செய்தியில், நாம் இப்போது எதிர்கொள்ளும் சோதனை நேரத்தில், நம் வலுவற்றநிலையை அனுபவிக்கிறோம், நம் வலுவற்றநிலையையும் கடந்து, கட்டுக்கடங்கா அழகைப் பார்க்கும் ஆண்டவர் நமக்குத் தேவைப்படுகின்றார், நம் வலுவின்மையில்கூட நாம் எவ்வளவு விலைமதிப்பற்றவர்கள் என்பதை அவரோடு சேர்ந்து கண்டுணர்வோம் என்ற சொற்கள் பதிவாகியிருந்தன.

ஏப்ரல் 20, இத்திங்கள் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 83 இலட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 April 2020, 14:50