போஸ்னியா-ஹெர்செகொவினா அரசுத்தலைவர் Komšić சந்திப்பு
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
போஸ்னியா-ஹெர்செகொவினா குடியரசின் தற்போதைய அரசுத்தலைவர் Željko Komšić அவர்கள், பிப்ரவரி 15, இச்சனிக்கிழமை காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் தனியே சந்தித்து உரையாடினார்.
திருத்தந்தையுடன் நிகழ்ந்த இச்சந்திப்பிற்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் நேரடிச் செயலர், பேரருள்திரு Miroslaw Wachowski அவர்களையும், அரசுத்தலைவர் Komšić அவர்கள் சந்தித்தார்.
போஸ்னியா-ஹெர்செகொவினா குடியரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், அக்குடியரசில் கத்தோலிக்கரின் நிலை உட்பட, அந்நாட்டின் இப்போதைய நிலைமை, அனைத்து குடிமக்களின் உரிமைகள் மதிக்கப்படல், அக்குடியரசின் மூன்று தொகுதி மக்களும் சமநிலையில் நடத்தப்படல் போன்ற தலைப்புகள், இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று, திருப்பீட தகவல் தொடர்பகம் கூறியது. .
மேலும், போஸ்னியா-ஹெர்செகொவினா குடியரசும், திருப்பீடமும் பொதுவாக விரும்பும், உலகளாவிய மற்றும், அக்குடியரசுப் பகுதியின் அமைதி, பாதுகாப்பு, மேற்கு பால்கன் பகுதி நாடுகள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள், பால்கன் பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தை விரிவுபடுத்துவது ஆகிய விவகாரங்களும், இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று, அத்தொடர்பகம் கூறியது.
போஸ்னியா-ஹெர்செகொவினா குடியரசின் அரசுத்தலைவர் அமைப்பு, மூன்று பேரைக் கொண்டது. இவர்களின் பணி, சுழற்சி முறையில் இடம்பெறுகின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்